

ஐபிஎல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெபக்குமார் தாக்கல் செய்த மனு விவரம்:
5-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா சென்னையில் கடந்த 2012, மார்ச்சில் நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாசமாக நடனமாடினர்.
நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட அந்த நிகழ்ச்சியைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஐபில் தொடக்க விழாவில் ஆபாசமாக நடனம் ஆடியது தொடர்பாக பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி என். கிருபாகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த அவர், ‘இந்த புகார் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே, இந்த மனுவில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.