Last Updated : 04 Jun, 2019 02:08 PM

 

Published : 04 Jun 2019 02:08 PM
Last Updated : 04 Jun 2019 02:08 PM

இங்கிலாந்து வீரர்கள் ஜேஸன் ராய், ஜோப்ரா ஆர்ச்சருக்கு அபராதம்: பாக். வீரர்களுக்கும் தண்டனை

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டு இங்கிலாந்து வீரர்கள் ஜேஸன் ராய், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் நேற்று நாட்டிங்ஹாமில் நடந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.

இந்தபோட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பந்துவீசியது. அப்போது 14-வது ஓவரின்போது, இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய் ஒரு பீல்டிங்கை தவறவிட்டார். அப்போது, திடீரென ராய் மிகவும் கோபமாக ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். இந்த வார்த்தை மைக்கின் மூலம் நடுவருக்கு தெளிவாகக் கேட்டது. இது ஐசிசி ஒழுக்கவிதிகள்  பிரிவு 2.3ன்படி, சர்வதேசபோட்டியில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது குற்றமாகும்.

இதைபோல ஆட்டத்தில் 27-வது ஓவரின் போது, நடுவர் அறிவித்த முடிவுக்கு இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த செயலும் ஒழுக்கக்குறைவானதாக ஐசிசி விதிகள் படி அமைந்துள்ளது. இருவருக்கும் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும், ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கப்பட்டது.

மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர். இதனால் கேப்டன் சர்பிராஸ் அகமதுவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமும், வீரர்கள் அனைவருக்கும் 10 சதவீதம் அபராதமும் விதித்து ஐசிசி உத்தரவிட்டது.

கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ், எஸ். ரவி, 3-வது நடுவர் ருச்சிரா பள்ளியகுருகே, கிறிஸ் ஜெபானி ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐசிசி எலைட் குழுவின் தலைவரும், போட்டி நடுவரான ஜெப் குரோப் தலைமையிலான குழுவினர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x