

இந்தியா-பாகிஸ்தான் போட்டி மிகப்பெரியதுதான் ஆனால் இதில் வெற்றியோ தோல்வியோ இத்துடன் தொடர் முடிவடையப்போவதில்லை, இன்னும் பெரிய கான்வாஸில் வைத்து நான் தொடரைப் பார்க்கிறேன் என்று இந்திய கேப்டன் விராட் கோலி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஞாயிறு ஆட்டத்துக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
ஆட்டம் ஒரு குறித்த நேரத்தில் தொடங்கும் ஒரு நேரத்தில் முடிவடையும். நாம் நன்றாக ஆடினாலும் ஆடாவிட்டாலும் இது வாழ்நாள் பூராவும் நடக்கும் போட்டியல்ல. ஒருநாளோடு முடிவடையப் போவது.
நாளை நாங்கள் நன்றாக ஆடுகிறோமோ அல்லது ஆடவில்லையோ உலகக்கோப்பை இத்துடன் முடிந்து விடப்போவதில்லை. தொடர் நடந்து கொண்டுதான் இருக்கும், கவனம் இதைவிடவும் பெரிய விஷயத்தில் உள்ளது.
11 வீரர்களும் பொறுப்பை பகிர்ந்து கொள்கிறோம், வானிலை யார் கையிலும் இல்லாதது. எத்தனை ஓவர்கள் ஆட்டம் நடக்கும் என்று தெரியவில்லை, ஆகவே எத்தனை ஒவர்கள் ஆடினாலும் என்ன செய்ய வேண்டியுள்ளதோ அதைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
அப்போது பிராந்திய மொழி நிருபர் ஒருவர் மொகமது ஆமிருக்கும் விராட் கோலிக்கும் இடையேயான தனிப்பட்ட எதிர்கொள்ளல் எப்படியிருக்கும் என்று கேட்டார், இதற்கு விராட் கோலி, “டிஆர்பி ரேட்டிங்குக்காகவோ, பரபரப்பு தலைப்புகளுக்காகவோ நான் எதையும் கூறப்போவதில்லை. யார் வீசினாலும் சிகப்புப் பந்து அல்லது வெள்ளைபந்து அவ்வளவுதான் என் கவனம்.
எந்த பவுலராக இருந்தாலும் அவரது திறமையை மதிக்கப்போகிறோம். ரபாடா பற்றியும் இதையேதான் கூறினேன்.
உலகக் கிரிக்கெட்டில் தாக்கம் செலுத்தும் பவுலர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பலம் குறித்து நாம் கவனமாக இருப்பது அவசியம் அதே வேளையில் எந்த பவுலரகா இருந்தாலும் நாம் ரன்கள் ஸ்கோர் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் வேண்டும். என்னுடைய ஆட்டமோ, ஆமிருடைய ஆட்டமோ முடிவுகளை தீர்மானிக்காது.
என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.