Published : 02 Jun 2019 05:03 PM
Last Updated : 02 Jun 2019 05:03 PM
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஹெல்மெட்டில் பந்துபட்டு காயமடைந்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹசிம் அம்லா இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் எனத் தெரிகிறது.
உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், தென் ஆப்பிரிக்க அணியும் மோதன. அந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்ஸர் பந்து ஹசிம் அம்லாவின் ஹெல்மெட்டின் வலைப்பகுதியில் பட்டு தெறித்து. சிறிது நேரத்தில் நிலை குலைந்த ஹசிம் அம்லா முதலுதவி எடுத்துக்கொண்டார்.
அதன்பின் வேறு ஹெல்மெட் அணிந்து விளையாட முயன்றும் முடியாததால், போட்டியில் இருந்து வெளியேறினார். ஆனால், அம்லா சென்ற பாதிப்பில் இருந்து மீளாத தென் ஆப்பிரிக்கஅணி 104 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
மேலும் வங்கதேசத்துடன் இன்று ஓவல் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்க அணியில் ஹசிம் அம்லா இடம் பெறவில்லை.
கடந்த இருநாட்களாக ஓய்வில் இருந்துவரும் ஹசிம் அம்லா இந்தியாவுக்கு எதிராக வரும் 5-ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் பங்கேற்பாரா எனக் கேள்வி எழுந்தது. ஏனென்றால், தென் ஆப்பிரிக்காவின் முக்கியத் துருப்புச்சீட்டு பேட்ஸ்மேன் அம்லா. தொடக்க ஆட்டத்தை டீ காக்குடன் இணைந்து வலுவாக கொண்டு செல்லும திறமை உடையவர் அம்லா.
ஆதலால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா அம்லா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இது குறித்து அணியின் மேலாளர் முகமது முசாஜி கூறுகையில், " ஹசிம் அம்லா முழுமையாக ஹெல்மெட் காயத்தில் இருந்து குணமடையவில்லை. ஆதலால் இன்றைய வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அம்லா விளையாடவில்லை. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அம்லாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளோம். ஆனால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹசிம் அம்லா விளையாடுவார் என நம்புகிறோம். அடுத்த இரு நாட்களில் அவர் முழுமையாக குணமடைந்துவிடுவார் எனத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT