Published : 02 Jun 2019 10:27 AM
Last Updated : 02 Jun 2019 10:27 AM
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதிர்ச்சி இல்லாதவர், களத்தில் பக்குவமின்றி செயல்படுவார். எதிரணி வீரர்களை அவர் திட்டுவார், ஆனால், பதிலுக்கு நாங்கள் ஏதேனும்பேசினால் கோபப்படுவார் என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரபாடாவும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விராட் கோலியும் இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையிலான உரசலை ரபாடா குறிப்பிட்டார்.
உலகக்கோப்பைப் போட்டியில் வரும் 5-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ள நிலையில் இந்த கருத்தை ரபாடா குறிப்பிட்டு உரசிப்பார்த்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
கிரிக்இன்போ இணையதளத்துக்கு தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீ்ச்சாளர் காகிசோ ரபாடா அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஐபிஎல் போட்டியில் நான் களத்தில் இறங்கிவிட்டால் எவ்வாறு விளையாடுவது பந்துவீசுவது என்று மட்டுமே சிந்திப்பது வழக்கம். ஆனால், விராட் கோலி, ஒரு முறை என் பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு, என்னிடம் என்னை கோபப்படுத்தும் வகையில் ஒரு வார்த்தை பேசினார். பதிலுக்கு நான் அடுத்து ஒரு பந்துவீசி அவருக்கு மீண்டும் அதே வார்த்தையைப் பேசினேன்.அதற்கு உடனே அவர் கோபம் கொண்டார்.
எனக்கு இதுபோன்ற வீரர்கள் பிடிக்காது. என்னைப் பொறுத்தவரை விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரர், பக்குவப்படாதவர். எதிரிணி வீரர்களை இவர் சீண்டலாம், ஆனால், அவரை விமர்சிக்கும் போது அதை ஏற்க தயாராக இல்லை.
ஆனால், பதிலுக்கு அவர்கள் பேசினால் கோபப்படுகிறார்.
விராட்கோலி எப்போதுமே களத்தில் கோபத்துடனே இருந்தார். அன்றைய போட்டி முடிந்தஅன்று மாலையில் ஹோட்டலுக்கு வந்தபின் எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஏன் விராட் கோலி தேவையில்லாமல் களத்தில் கோபப்பட்டால், ஆட்டம் முழுவதுமே கோபத்துடனே ஏன் இருந்தார். உண்மையில் அவர் கோபத்துடனே இருந்தாரா என்று கேட்டுக்கொண்டேன். ஆனால், விராட் கோலி களத்தில் கோபத்தோடுதான் இருந்தார்.
நீங்கள் களத்தில் கோபத்துடன் இருந்தால், எவ்வாறு உங்களால் சிறப்பாக விளையாட முடியும். நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா. என் மனநிலையை ஒருபோதும் கோபப்படுத்த முடியாது.
விராட்கோலி மிகச்சிறந்த வீரர், பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தியாவின் முக்கியத் தூணாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்பதை ஏற்கிறேன்.
இவ்வாறு ரபாடா தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஐசிசி சிறந்த வீரருக்கான விருதில் ரபாடாவை தோற்கடித்தவர் விராட் கோலி, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதியிலும் ரபாடாவை தோற்கடித்தவர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT