Last Updated : 16 Jun, 2019 10:33 AM

 

Published : 16 Jun 2019 10:33 AM
Last Updated : 16 Jun 2019 10:33 AM

ஓபனிங் நல்லாத்தான் இருந்தது.. பினிஷிங்கில் கோட்டைவிட்டது இலங்கை: முதலிடத்தில் ஆஸி.

ஆரோன் பிஞ்ச் அபாரசதம், மேக்ஸ்வெல்லின் திணறவைக்கும் பந்துவீச்சு, ஸ்டார்க்கின்  விக்கெட் வீழ்த்தும் திறமை ஆகியவற்றால், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் சேர்த்தது. 335 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்து 87 ரன்களில் தோல்வி அடைந்தது.  

இந்த போட்டித் தொடரின் முதல் சதத்தை ஆரோன் பிஞ்ச் நேற்று பதிவு செய்து 153 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கே ஆட்டநாயன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 வெற்றிகள், ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இலங்கை அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்விகள், 2 போட்டிகள் மழையால் ரத்து என 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் கருணாரத்னே, குஷால் பெரேரா இருவரும் அமைத்துக்கொடுத்த வலுவான அடித்தளத்தை பின்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் முறையாக பயன்படுத்தாததால் இலங்கை அணி பரிதாபமாகத் தோற்றது. சிறப்பான தொடக்கத்தை அளித்து, கடைசியில் சோகமான முடிவை இலங்கை தேடிக்கொண்டது.

ஒட்டுமொத்தத்தில் இலங்கை பேட்ஸ்மேன்கள் தாங்கள் 20 ரன்கள் பேட்ஸ்மேன்கள்தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள். இவர்களின் சராசரி 20 ரன்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் பந்துவீச வரும்போது இலங்கை அணி நல்ல ரன்ரேட்டில் இருந்தது. ஆனால், மேக்ஸ்வெல்லின் பந்துவீச்சு இலங்கை அணிக்கு ஏற்படுத்திய நெருக்கடியில் வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள் வீதம் அதிகரிக்க பதற்றத்தில் விக்கெட்டுகளை இழந்தது.

இந்த ஆட்டத்தில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மேக்ஸ்வெல் கலக்கினார். கடைசிநேரத்தில் களமிறங்கி பொளந்துகட்டிய மேக்ஸ்வெல் 25 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார், பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்னேவும், பெரேராவும் மிகச்சிறப்பான தொடக்கத்தை அளித்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தனர். இவர்கள் இருவரின் விக்கெட்டுகளை எடுக்க முடியால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் உண்மையில் திணறினர். பவர்ப்ளேயில் 87 ரன்களும் 13 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டி வலுவான நிலையில் இலங்கை அணி சென்றது.

ஆனால், பெரேரா அரைசதம் அடித்து 52 ரன்கள் சேர்த்திருந்தபோது மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 115 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர்.

அதன்பின் அடுத்துவந்த எந்த பேட்ஸ்மேன்களும் 25 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. 2-வதாக களமிறங்கிய திரிமாணே 16 ரன்கள், கே.மெண்டிஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதானமாக பேட் செய்த கேப்டன் கருணாரத்னே 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு 97 ரன்னில் ரிசார்ட்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

205 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவான நிலையில் இலங்கை அணி இருந்தது. வெற்றிக்கு  ஓவருக்கு 6.5 ரன் ரேட் வீதம் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், அதன்பின் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச்சில் அளித்த நெருக்கடி, அழுத்தம் ஆகியவற்றை தாக்குப்படிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

குறிப்பாக மேக்ஸ்வேல் நேற்று பேட்டிங்கிலும் கடைசிநேரத்தில் கலக்கினார், பந்துவீச்சிலும் அசத்தினார். மேக்ஸ்வெல்லின் ஓவரில் இலங்கை வீரர்கள் ரன் சேர்க்க திணறி ஏராளமான டாட் பந்துகளை விட்டது பெரும் நெருக்கடியில் தள்ளியது.

205 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, அடுத்த 42 ரன்களுக்கு  மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்த வெற்றியை பறிகொடுத்தது.

மாத்யூஸ்(9), ஸ்ரீவர்தனா(3), பெரேரா(7),உதானா(8),மலிங்கா(1),  பிரதீப(0) என பின்வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெற்றியை கோட்டைவிட்டனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ரிசார்ட்ஸன் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x