Last Updated : 27 Jun, 2019 07:21 AM

 

Published : 27 Jun 2019 07:21 AM
Last Updated : 27 Jun 2019 07:21 AM

பாபர் ஆசம் அற்புத சதம்: சோஹைல் அதிரடி: நியூஸிக்கு முதல் தோல்வியளித்த பாகிஸ்தான்: 1992- வரலாறு திரும்புகிறதா?

பாபர் ஆசமின் அற்புதமான சதம், ஹரிஸ் சோஹைலின் அதிரடி அரைசதம், ஷாகின் அப்ரிடியின் வேகப்பந்துவீச்சு ஆகியவற்றால் எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் அணி.

இந்த ஆட்டத்தின் ஹீரோவாக இருந்தவர்கள் “பாகிஸ்தானின் விராட் கோலி” என்று வர்ணிக்கப்படும் பாபர் ஆசம், சோஹைல் இருவர்தான். 4-வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானை வெற்றிக்கு வழிநடத்தினா். ஆட்டநாயகன் விருதை பாபர் ஆசம் வென்றார்.

இந்த போட்டியை காண அரங்கில் ஆயிரக்கணக்கில் பாகிஸ்தான் ரசிகர்கள் கூடியிருந்தனர். பாபர் ஆசம் சதம் அடிப்பதைக் காண அனைவரும் எழுந்துநின்றதும், ஆதரவு அளித்ததும் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. இங்கிலாந்தில் விளையாடுகிறோமா அல்லது லாகூரில் விளையாடுகிறோமோ என்ற சந்தகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் ேசர்த்தது. 238 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 241ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ெவற்றியின் மூலம் பாகிஸ்தான் 7 போட்டிகளி்ல் 3 வெற்றிகள், தோல்விகள்,ஒருபோட்டி ரத்து என 7 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணிக்கு அடுத்தார்போல் வந்துவிட்டது.

அடுத்துவரும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் 11 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைய அதிகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

ஆனால், இங்கிலாந்து அணி அடுத்துவரும் இந்தியா, நியூஸிலாந்து அணியுடன் ஒருஆட்டத்தில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழக்க நேரிடும்.

இந்த தொடரில் நியூஸிலாந்து அணி தொடக்கம் முதலே தோல்வியை ருசிக்காமல் பயணித்து வந்தது.இப்போது முதல் தோல்வி ஏற்பட்டு, 7 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது

கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அப்போதும், இதேநிலைமை தான் பாகிஸ்தானுக்கு இருந்தது, அப்போது இருந்த பல ஒற்றுமைகள் இப்போதும் இருப்பதால், மீண்டும் 1992 வரலாறு திரும்புமா என்று பாக்.ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உலகக் கோப்பை தொடங்கும் முன் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் 400 ரன்கள் வரை அடிக்க முடியும் என்று பேசப்பட்டது. ஆனால் மழை பெய்துவிட்டு சிறிது நேரத்தில் எல்லாம் ஆடுகளத்தின் ஒட்டுமொத்த தன்மையே மாறிவிடுகிறது

இந்த போட்டி நடந்த ஆடுகளம் இங்கிலாந்து ஆடுகளம் போல் இல்லால், இந்திய ஆடுகளம் போல் மட்டமாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. முகமது ஹபீஸ், சதாப் கான் பந்துவீசும் போது ஏகத்துக்கும் டர்ன் ஆனது. ஆடுகளத்தின் நடுவில் பிட்ச் ஆகினால், பந்து ஆப்-சைடு நோக்கி சென்று பேட்ஸ்மேனை திணறடித்தது.

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பெரும்பாலும் பந்துவீசாதவர் ஆனால், சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பதைப் பார்த்து நேற்று அவர் ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். வில்லியம்ஸன் பந்தும் ஏகத்தும் சுழன்றது. இதுபோன்ற ஆடுகளங்கள் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்கள் திறமையாக இருந்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும்.

நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை நேற்றைய ஆட்டத்தில் ஆடுகளத்தின் ஏமாற்றத்தால் வேகப்பந்துவீச்சாளர்கள் எதி்ர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. கேப்டன் வில்லியம்ஸன் 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும், 4-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசத்தையும், சோஹைலையும் எடுக்கமுடியவில்லை.

பாபர் ஆசத்துக்கு ஒரு கேட்சை டாம் லாதம் கோட்டைவிட்டதற்கான மிகப்பெரிய விலையாக அவரை சதம் அடிக்கவிட்டனர். இந்த கேட்சை லாதம் பிடித்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கும்

ஹென்றி, நீஷம், சான்ட்னர், போல்ட், பெர்குஷன், வில்லியம்ஸன், முன்ரோ, கிராண்ட்ஹோம் என 8 பேர் பந்துவீசினார்கள். எப்போதும் தீர்க்கமாகச் செயல்படக்கூடிய கேப்டன் வில்லியம்ஸன் நேற்று சற்று குழப்பமடைந்தார்.

போல்ட், சான்ட்னருக்கு மட்டுமே ஓவர் முடிக்கப்பட்டது. பெர்குஷன், ஹென்ரி, நீஷம் ஆகியோருக்க போதுமான ஓவர்கள் அளிக்காமல் பந்துவீசச் செய்தார். மேலும், அணியில் சான்ட்னரைத்தவிர முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறையாகும். அடுத்துவரும் போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தை வில்லியம்ஸன் அளிப்பார்.

பேட்டிங்கிலும் தொடக்க வீரர்கள், நடுவரிசை வீரர்களின் திடீர் சரிவு நியூஸிலாந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து கதை முடிந்துவிட்டது என்றபோது, கிராண்ட்ஹோம், நீஷம் இருவர் அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும், 132 ரன்கள் சேர்த்தனர்.

பீல்டிங்கில் நேற்று நியூஸிலாந்து பிரமாதமாக செயல்பட்டார்கள். இமாம் உல் ஹக்கிற்கு முன்ரோ டைவ் செய்து எடுத்த கேட்ச், ஹாரிஸ் சோஹைலுக்கு கப்திலின் ரன்அவுட் அற்புதமாக இருந்தது.

கடந்த 1992-ம் ஆண்டில் ஜான்டி ரோட்ஸ், நியூஸிலாந்து அணிக்கு எதிராக டைவ் அடித்து செய்த ரன் அவுட் போன்று இருந்தது.

ஒட்டுமொத்தத்தில் நியூஸிலாந்து அணிக்கு விக்கெட்டில் ஏற்பட்ட சரிவு, ஆடுகளத்தின் தன்மை ஏமாற்றமளித்துவிட்டது

பாகிஸ்தான் அணியைப் பொருத்தவரை 5 போட்டிகள்வரை ஒரு வெற்றி மட்டும் பெற்று, தற்போது மீண்டுவந்திருப்பது அனைவரின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான்.

இந்த ஆட்டத்தில் ஷாகீன் அப்ரிடியின் பந்துவீச்சு நியூஸிலாந்து வீரர்களுக்கு நிச்சயம் கிலியாக அமைந்தது. ஆடுகளத்தி்ன் தன்மையால் பந்துகள் திடீரென ஸ்விங் ஆனது பேட்ஸ்மேன்களை உலுக்கிவிட்டது.

பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுவை நாகரீகமற்ற முறையில் விமர்சித்த ரசிகர்களுக்கு அவர் நேற்று ராஸ் டெய்லருக்கு ஒற்றைக் கையில் டைவ் அடித்து பிடித்த கேட்சால் பதில் கூறிவிட்டார்.

சுழற்பந்துவீச்சலும் சதாப்கான், ஹபீஸ், இமாத்வாசிம் 3பேரும் சேர்ந்து நியூஸிலாந்து அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினர். பாகிஸ்தான் அணிக்கு சுழற்பந்துவீச்சு மிகப்பெரிய பலமாகும்.

பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக், பக்கர்ஜமான் ஏமாற்றினாலும் ஹபீஸ் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தார். அவரும் வில்லியம்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் 4-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம், சோஹைல் ஆடிய ஆட்டம் அற்புதமானது. இருவரும் அணியை கட்டமைத்து வெற்றிக்கு கொண்டு சென்றனர்.

சோஹைலின் அதிரடி அரைசதம், மிகவும் நிதானமாக பேட்செய்து, மேட்ச்வின்னராக ஜொலித்த பாபர் ஆசத்தின் 10-வது சதம் அற்புதம்.

டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது. ஷாகீன் அப்ரிடியும், அமீரும் சேர்ந்து நியூஸிலாந்து பேட்ஸ்மேனுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தினர்.

கப்தில்(5), முன்ரோ(12), டெய்லர்(3), லாதம்(1) என 46 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து தவித்தது. 5-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், நீஷம் ஜோடி ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தனர். நிலைக்காத வில்லியம்ஸன் 41ரன்னில் சதாப்கானிடம் விக்ெகட்டை இழந்தார்

6-வது விக்கெட்டுக்கு கிராண்ட்ஹோ், நீஷம் இருவரும் சேர்ந்து நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். நீஷம் 77 பந்துகளிலும், கிராண்ட்ஹோம் 63 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 132 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கிராண்ட்ஹோம் 64 ரன்களி்ல ஆட்டமிழந்தார்.

நீஷம97 ரன்களிலும், சான்ட்னர் 5 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

238 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பெர்குஷனின் 150 கி.மீ வேகத்தில் இமாம் உல் ஹக் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருக்கு கப்தில் டைவ் அடித்து பிடித்த கேட்ச் ஆக்சிறந்தது. போல்டின் ஸ்விங் பந்தவீச்சில் பக்கர் ஜமான் 9 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு முகமது ஹபீஸ், பாபர் ஆசம் ஓரளவுக்கு நிதானமாக பேட்செய்தனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறுவதைப் பார்த்த வில்லியம்ஸன் தான் பந்துவீசவந்தார். இவரின் ஓவரில் ஹபீஸ் 32 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

4வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம், ஹரிஸ் சோஹைல் ஜோடி அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரையும் பிரிக்க 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. பாபர் ஆசம் 65 பந்துகளிலும், சோஹைல் 63 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். பாபர் ஆசம் 120 பந்துகளில் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார்.

அதுமட்டுமல்லாமல் பாபர் ஆசம் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ஆம் 57 இன்னிங்ஸில் அடைந்தநிலையில், பாபர்ஆசம் 68இன்னிங்ஸில் அடைந்தார்.

சிறப்பாக பேட் செய்த சோஹைல் 68 ரன் ேசர்த்திருந்தபோது ரன்அவுட் செய்யப்பட்டார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 126 ரன்கள் சேர்த்தனர்.

பாபர் ஆசம் 101 ரன்னும், சர்பிராஸ் அகமது 5 ரன்னும் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தனர். 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் வென்றது.

நியூஸிலாந்து தரப்பில் போல்ட், பெர்குஷன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x