ஆடவர் இரட்டையர் டென்னிஸ்: இந்தியாவுக்கு வெள்ளி

ஆடவர் இரட்டையர் டென்னிஸ்: இந்தியாவுக்கு வெள்ளி
Updated on
1 min read

ஆசிய விளையாட்டு ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

இன்சியானில் இன்று நடைபெற்ற இரட்டையர் இறுதிப் போட்டியில் தென் கொரியாவுடன் மோதிய இந்திய இரட்டையர் ஜோடியான சாகேத் சாய் மைனேனி மற்றும் சனம் கிருஷண் சிங் ஆகியோர் 5-7, 6-7, என்ற செட் கணக்கில் தோல்வி தழுவினர்.

தென் கொரிய இரட்டையர் வீரர்களான லிம் யோங்க்யூ, சங் ஹையான் ஜோடி தங்கம் வென்றது.

தென்கொரிய ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் உற்சாகமாக ஆடிய தென்கொரிய வீரர்கள் 'டிராப் வாலி'-யில் சிறப்பாகத் திகழ்ந்தனர்.

2010ஆம் ஆண்டு குவாங்சூவில் நடைபெற்ற போட்டியில் சனம்-சோம்தேவ் தேவ் வர்மன் ஜோடி இரட்டையர் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை முதல் செட்டில் போராடி தோற்ற இந்திய ஜோடி, 2-வது செட்டில் ஆட்டத்தை சமன் முறிவுக் கட்டத்திற்கு நகர்த்தினர். அதற்கு முன்னர் 2வது செட்டில் 1-4 என்று பின் தங்கியிருந்தனர்.

சமன் முறிவு ஆட்டத்தில் 6-2 என்று கொரியா முன்னிலை வகிக்க லிம் சர்வை சனம் கிருஷண் ஃபோர் ஹேண்ட் ஷாட்டில் பந்தை வெளியே அடிக்க தோல்வி ஏற்பட்டது.

சானியா மிர்சா-மைனேனி ஜோடி இன்று கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் விளையாடுவதால் டென்னிஸில் தங்கப்பதக்க வாய்ப்பு இன்னும் உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in