Last Updated : 23 Mar, 2018 09:40 PM

 

Published : 23 Mar 2018 09:40 PM
Last Updated : 23 Mar 2018 09:40 PM

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வார்னர்: ஹாட்ரிக் பவுண்டரி அடித்ததற்கு பதிலடி கொடுத்து அனுப்பிய ரபாடா

 

கேப்டவுன் நகரில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஆட்டமிழந்து சென்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த வார்னருக்கு ரபாடாவும் தகுந்த பதிலடி அளித்தார்.

தென் ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் பேட் செய்தது.

முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் பந்துவீச்சாளர் ரபாடாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. மேலும், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தின் தோள்பட்டையில் மோதியதால், 2 போட்டிகள் விளையாட ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச வரும்போது பரபரப்பான சூழல் நிலவியது.

அதேபோலவே ரபாடா பந்துவீச வரும்போது, டேவிட் வார்னர் அவரின் பந்துகளை பவுண்டரிகளாக அடித்து துவைத்தார். ரபாடா வீசிய 4-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்த வார்னர் அவரை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்.

அதேபோல 5-வது ஓவரை ரபாடா வீச வந்தபோது, முதல் பந்தில் சிக்சர் அடித்தார் வார்னர். ஆனால், 3-வது பந்தை வார்னர் எதிர்பார்க்கவில்லை. ரபாடா வீசிய அந்த பந்து இன்ஸ்விங்கில் வார்னரின் ஆப்ஸ்டிக்கை காலி செய்தது. தொடர்ந்து ஹாட்ரிக் பவுண்டரிகளையும், சிக்சரையும் அடித்த வார்னரை, கிளீன் போல்டாக்கி ரபாடா பதிலடி கொடுத்தார்.

தான் ஆட்டமிழந்த கோபத்தோடு பெவிலியனுக்கு வார்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓய்வறைக்கு செல்லும் மாடிப்படி அருகே நின்றிருந்த ரசிகர் ஒருவர் வார்னரைப் பார்த்து ஏதோ கூறினார்.

இதனால், ஆத்திரமடைந்த வார்னர் மீண்டும் கீழே இறங்கி அந்த ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் வார்னரை சமாதானம் செய்து, அனுப்பி வைத்தார். ஆட்டமிழந்த கோபத்தில் ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வார்னரின் செயல் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x