Published : 15 Mar 2018 07:43 PM
Last Updated : 15 Mar 2018 07:43 PM

இலங்கை வீரர்கள் உடலில் ஜிபிஎஸ்: 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயாராக நூதன யுத்தி

2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில், இலங்கை அணி வீரர்கள் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன், உடல்தகுதி, காயம் ஏற்படாமல் தடுத்துல் போன்ற பணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா கால்பந்து அணியில் வீரர்களுக்காக செய்யப்பட்ட அதிநவீன முறை இப்போது இலங்கை வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது இதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டாலரை( ரூ.50லட்சம்)செலவு செய்துள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆஷ்லே டி சில்வா கூறுகையில், ‘ 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்காக அணியைத் தயார் செய்யும் பணியில், நாங்கள் ஏராளமான தொழில்நுட்பங்களையும், நவீன முறைகளையும் அணிக்குள் புகுத்தி வருகிறோம்.

கடந்த 1996ம் ஆண்டுக்குபின் நாங்கள் உலகக்கோப்பையை வெல்லவில்லை. 2014ம்ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றோம். புதிய பயிற்சியாளர் சந்திகா ஹதிருசிங்கா தலைமையில் அணி பல தோல்விகளை அடைந்திருந்தபோதிலும், வெற்றிகளையும் பெற்றுவருகிறது.

இப்போது நாங்கள் வீரர்கள் உடலில் பொருத்திரு இருக்கும் ஜிபிஎஸ் கருவி வீரர்களின் திறனை சிறப்பாக மேலாண்மை செய்ய உதவும். தற்போது நடந்துவரும் முத்தரப்பு டி20போட்டிகளில் இருந்தே இந்த முறையை செயல்படுத்த தொடங்கிவிட்டோம்’ எனத் தெரிவித்தார்.

இந்த ஜிபிஎஸ் கருவி இலங்கை வீரர்களின் முதுகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. வீரர்கள் களத்தில் இறங்கும்போது, அவர்களின் முதுகில் பச்சை, நீல நிறத்தில் விளக்குகள் ஒளிவரும். இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் வீரர்களின் உடல்தகுதி, திறனை ஓய்வறையில் இருந்தே பயிற்சியாளர் கண்காணிக்க முடியும்.

அதாவது, வீரர்கள் களத்தில் இருக்கும் போது, எத்தனை மீட்டர் ஓடினார்கள், பந்துகளை எப்படிவீசினார்கள், பீல்டிங் செய்யும் போது, எப்படி உடல்திறனை வெளிப்படுத்தினார்கள் உள்ளிட்டவற்றை இந்த கருவி கண்காணிக்கும்.

மேலும், வீர்ர்கள் எத்தனை நிமிடங்கள் உடல்பயிற்சியின் போது, செயல்பாட்டுடன் இருந்தார்கள், களத்தில் எத்தனை நிமிடங்கள் செயலூக்கத்துடன் இருந்தார்கள், அவர்களின் பணிப்பளு எப்படி இருக்கிறது, ஆகியவற்றை ஓய்வறையில் இருந்தபோது அணியின் மற்ற உடற்பயிற்சியாளர்கள் கண்காணிப்பார்கள் இதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும், வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளர் நிக்கி போத்தாஸ் இந்த தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்டுத்தினார். அதன்பின் இலங்கை அணி கிரிக்கெட்டில் அறிமுகம் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x