Published : 16 Mar 2018 09:13 AM
Last Updated : 16 Mar 2018 09:13 AM
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றின் 2-வது கட்ட ஆட்டத்தில் செல்சியா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி 2 கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 100 கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் மெஸ்ஸி.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நவ் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-வது நிமிடத்திலேயே செல்சியா கோல்கீப்பர் திபட் கோர்டோஸூக்கு போக்கு காட்டியபடி மெஸ்ஸி கோல் அடிக்க பார்சிலோனா அணி 1-0 என முன்னிலை பெற்றது. 20-வது நிமிடத்தில் பார்சிலோனா தனது 2-வது கோலை அடித்தது. மெஸ்ஸியின் உதவியுடன் இந்த கோலை ஓஸ்மான்மே டெம்பெல்லா அடித்தார். இதனால் முதல் பாதியில் பார்சிலோனா அணி 2-0 என முன்னிலை வகித்தது.
62-வது நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இது அவரது 100-வது கோலாக அமைந்தது. கடைசி வரை போராடியும் செல்சியா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. முடிவில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் கட்ட ஆட்டத்தில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது. இதனால் சராசரி கோல்கள் விகிதப்படி பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
ஏற்கெனவே ரியல் மாட்ரிட், செவிலா, மான்செஸ்டர் சிட்டி, லிவர்புல், ஜூவென்டஸ், பேயர்ன் முனிச் ஆகிய அணிகளும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT