Last Updated : 25 Sep, 2014 11:18 AM

 

Published : 25 Sep 2014 11:18 AM
Last Updated : 25 Sep 2014 11:18 AM

ஆசிய விளையாட்டுப் போட்டி: 5-வது நாளில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் - துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5-வது நாளில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் துஷியந்த் துஷ்யந்த் மூலம் இந்தப் பதக்கம் கிடைத்தது.

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் லைட்வெயிட் துடுப்பு படகு ஒற்றையர் பிரிவு 2000 மீ. ரேஸில் ஹரியாணா வீரரான துஷ்யந்த் 500 மீ. தூரத்திலிருந்து 1800 மீ. தூரம் வரை முன்னிலையில் இருந்தார்.

கடுமையான காற்றுக்கும் மழைக்கும் இடையே சீறிப்பாய்ந்த அவர், கடைசிக் கட்டத்தில் பின்தங்கினார். 7 நிமிடம் 26.57 விநாடிகளில் இலக்கை எட்டிய அவர், 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் ஹாங்காங் வீரர் லோக் வான் ஹாய் தங்கப் பதக்கமும், தென் கொரிய வீரர் லீ ஹக்பியோம் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

வெற்றி முகம்

பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் தங்களின் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். சாய்னா 21-10, 21-8 என்ற நேர் செட்களில் மக்காவின் யூ டென் லாக்கையும், சிந்து 21-7, 21-13 என்ற நேர் செட்களில் மக்காவின் வாங் கிட் லெங்கையும் தோற்கடித்தனர். குத்துச்சண்டை போட்டியில் அகில் குமார் (60 கிலோ எடைப் பிரிவு), சிவ தாபா (56 கிலோ) ஆகியோர் தங்களின் முதல் சுற்றில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மகளிர் அணி பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ஹாங்காங்கையும், 2-வது ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் வீழ்த்தி பதக்க வாய்ப்பை நெருங்கியுள்ளது. ஆடவர் வாலிபால் போட்டியில் இந்திய அணி 25-10, 25-19, 25-17 என்ற நேர் செட்களில் மாலத்தீவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றம்

துப்பாக்கி சுடுதலில் முதல் 4 நாட்களில் 6 பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு 5-வது நாள் ஏமாற்றமாக அமைந்தது. ஆடவர் 25 மீ ரேபிட் பயர் பிஸ்டல் மற்றும் மகளிர் 50 மீ. ரைபிள் புரோன் பிரிவுகளில் இந்தியா 4 பதக்கங்கள் வெல்ல வாய்ப்பிருந்தபோதும் இறுதியில் ஒன்றைக்கூட வெல்ல முடியாமல் போனது.

மகளிர் வில்வித்தை தனிநபர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி எலிமினேட்டர் சுற்று என அழைக்கப்படும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் நாளை நடைபெறும் நாக் அவுட் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் முனிராவை சந்திக்கிறார்.

மகளிர் 29 இஆர் பாய்மர படகுப் போட்டியின் முதல் 2 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம், ஐஸ்வர்யா நெடுஞ்செழியன் ஆகியோர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இன்னும் 10 ரேஸ்கள் மீதமுள்ளன. இந்தப் போட்டி வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கூடைப்பந்து அணி வெளியேற்றம்

ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி தனது “பிரிலிமினரி” சுற்றில் 41-76 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நடாஷா தோல்வி கண்டு வெளியேறினார். அதேநேரத்தில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்வேதா ராணா-ரிஷிகா ஜோடி வெற்றியோடு தொடங்கியுள்ளது.

கோஷலுக்கு ரூ.30 லட்சம் பரிசு முதல்வர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சவ்ரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் உங்களுக்கு (சவுரவ் கோஷல்) வெள்ளிப் பதக்கம் கிடைத்த செய்திக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆசிய விளையாட்டுப் போட்டி யில் நீங்கள் பெறும் நான்கா வது விருது இதுவாகும். தமிழக மக்களின் சார்பில் என்னு டைய பாராட்டுகளை தெரிவித் துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.30 லட்சம் பரிசுத் தொகை உங்களுக்கு வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x