Published : 16 Mar 2018 04:32 PM
Last Updated : 16 Mar 2018 04:32 PM

புதிரா? சவாலா? ஏ.பி.டிவில்லியர்ஸைக் கண்டு அலறும் ஆஸி. ஊடகங்கள்

ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் பவுலர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகிறார், மேலும் ஏபிடிவில்லியர்ஸுக்கு என்று ஒரு செல்வாக்கும் உள்ளது, அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏபி.டிவில்லியர்ஸை மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி அடக்கி ஆளும் என்ற கவலை ஆஸ்திரேலிய கேப்டனை விட ஆஸி.ஊடகங்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது.

ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.காம்.ஏயு என்ற ஆஸ்திரேலிய இணையதளம் “5 எரியும் கேள்விகள், தோல்விக்குப் பிறகு வெற்றிப்பாதைக்குத் திரும்ப ஆஸி. என்ன செய்ய வேண்டும்? டிவில்லியர்ஸிடமிருந்து தொடங்க வேண்டும்” என்ற தொனியில் தலைப்பிட்டுள்ள செய்தி அறிக்கையில், “கேகிசோ ரபாடாவுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் ஏ.டி.டிவில்லியர்சை ஆஸ்திரேலியா எப்படிக் கையாளப்போகிறது என்பது முக்கியம்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் கிட்டத்தட்ட கட்டுப்படுத்த முடியாத ஒரு பேட்ஸ்மெனாகத் திகழ்கிறார், நேதன் லயன் ஒருவர்தான் அவரை வீழ்த்த முடிந்துள்ளது. டர்பன், போர்ட் எலிசபெத் என்று டிவில்லியர்ஸ் அடித்து நொறுக்குகிறார், 2வது இன்னிங்சில் லயன் அவரை 28 ரன்களில் வீழ்த்திய போது தென் ஆப்பிரிக்கா வெற்றியை நெருங்கி விட்டது.

நியூலேண்ட்சில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு டிவில்லியர்ஸ் 112.50 என்ற சராசரியுடனும் 75% ஸ்ட்ரைக் ரேட்டுடனும் வருகிறார். ஆஸ்திரேலியர்கள் இது தொடர அனுமதிக்க முடியாது, ஸ்மித் அன்று டிவில்லியர்ஸ் ரன் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்தும் 146 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆனார். இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் இரண்டு முக்கியமான அரைசதங்களால் தென் ஆப்பிரிக்கா வெற்றி கண்டது” என்று இந்த ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் பத்தி அலறியுள்ளது.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை, “டிவில்லியர்ஸ் புதிரை உடைக்க வேண்டும்” என்று தலைப்பிட்டு

டிவில்லியர்ஸ் ஒரு புதிராக மாறியுள்ளார், அவரை உடைத்தால்தான் ஆஸ்திரேலியா வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளது. டேரன் லீ மேனை மேற்கோள் காட்டி, “ நாங்கள் இன்னும் அவருக்கு சரியாக வீசவில்லை” என்று எழுதியுள்ளது. ஸ்மித்தும் டிவில்லியர்ஸ் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று கூறியதை மேற்கோள் காட்டியதோடு, ‘அவரும் மனிதர்தான் தவறு செய்வார்’ என்று ஸ்மித் நம்பிக்கை தெரிவித்ததையும் எடுத்துக் காட்டியுள்ளது.

முன்பு சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன் ஆகியோர் குறித்தும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் இத்தகைய பத்திகளை எழுதியுள்ளனர், இம்முறை ஏ.பி.டிவில்லியர்ஸைக் கண்டு ஆஸ்திரேலிய அணி அலறுகிறதோ இல்லையோ, ஆஸ்திரேலிய ஊடகங்கள் அலறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x