Published : 19 Mar 2018 09:10 PM
Last Updated : 19 Mar 2018 09:10 PM

‘விஜய் சங்கர் வாழ்க்கையையும் காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்’- ட்விட்டரில் கலாய்த்த ரசிகர்கள்

வங்கதேசத்துக்கு எதிரான நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விஜய் சங்கர் விளையாடிய விதத்தை ட்விட்டரில் ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

கொழும்பு நகரில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி ஆடியது. ரசிகர்களை உச்சகட்ட பரபரப்புக்கு இந்தஆட்டம் கொண்டு சென்றது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இருவரும் களத்தில்இருந்தனர். இதில் விஜய் தான் சந்தித்த முதல் பந்து வைடானது, அடுத்த பந்தில் ரன் அடிக்காமலும், 2-வது பந்தில் ஒரு ரன் மட்டும் அடித்தார். இதனால், ரசிர்கள் உச்சகட்ட வெறுப்புக்கு சென்றனர். 3வது பந்தில் தினேஷ் கார்த்திக் ரன் எடுத்து மீண்டும் சங்கருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

4-வது பந்தில் ஒருபவுண்டரி அடித்த சங்கர், அடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து அனைத்து ரசிகர்களின் கோபத்தையும் வாங்கிக்கட்டிக்கொண்டார். தொலைக்காட்சியில் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும், கடைசி ஒருபந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டுமே என்று கையை பிசைந்துகொண்டு இருந்தனர்.

ஆனால், சவுமியா சர்க்கார் வீசிய கடைசி பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ்ர் அடித்து இந்திய அணியை தோல்வியில் இருந்து தினேஷ் கார்த்திக் காப்பாற்றினார்.

இந்த வெற்றிக்கு பின், இந்திய ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து ஒருபக்கம் ட்விட் செய்தாலும், விஜய் சங்கரை கிண்டல் செய்யவும் மறக்கவில்லை. டவிட்டரில் ரசிகர்கள் செய்த டிவிட்கள் சில இதே உங்களுக்காக.

இதில் ஒரு ரசிகர், ‘விஜய் சங்கருக்கு இதுதான் முதல்தொடரும், இதுதான் கடைசித் தொடராகவும் அமைந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் மிகவும் கிண்டலாக ‘எங்கிருந்து இப்படிப்பட்ட வீரரை பிடித்துக்கொண்டு வந்தீர்கள், செவ்வாய் கிரகத்திலிருந்தா, பேட்டிங் செய்யத்தெரியவில்லை’ என்று பதிவிட்டு, அதில் ஒருவர் மற்றொருவரை துரத்தி, துரத்தி அடிப்பதுபோல ஒரு படத்தை பதிவிட்டு அதில் விஜய் சங்கரின் பெயரைப் போட்டு கிண்டல் செய்துள்ளார்.

இன்னும் சிலர், ‘இந்திய அணியில் விஜய் சங்கர் எப்படி இடம் பிடித்தார், இவர் தெருவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்’ என்று தெரிவித்துள்ளனர்.

‘தினேஷ் கார்த்திக் இந்திய அணியை மட்டும் காப்பாற்றவில்லை, விஜய் சங்கரையும், வங்கதேசத்தின் நாகின் நடனத்தை பார்ப்பதில் இருந்தும் இந்திய ரசிகர்களை காப்பாற்றிவிட்டார்’ என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.

சில ரசிகர்கள் மிகக் கடுமையாக ‘விஜய் சங்கர் ஒரு பைத்தியம், யாராவது இக்கட்டான நேரத்தில் 4 பந்துகளை வீணாக்குவார்களா?’ என்று தெரிவித்துள்ளனர்.

‘விஜய் சங்கரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக தடை செய்ய வேண்டும், இவர் டென்னிஸ்பந்தில் கிரிக்கெட் விளையாடத்தான் தகுதியானவர்’ என்று ட்விட்டரில் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

‘மக்கள் ஏன் நோட்டாவுக்கு வாக்களித்தார்கள் என்பதற்கு விஜய்சங்கர்தான் காரணம்’ என்றும், ‘விஜய் சங்கரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்த வங்கதேச வீரர் ஹசன் மிர்சாவுக்கு இந்திய ரசிகர்கள் சார்பில் நன்றி’ என்று கிண்டல் செய்துள்ளனர்.

‘இந்திய அணியை மட்டுமல்லாமது, விஜய் சங்கரின் கிரக்கெட் வாழ்க்கையையும் தினேஷ் கார்த்திக் காப்பாற்றிவிட்டார்’ என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x