

உலகக்கோப்பைத் தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு காயம் ஏற்பட எக்ஸ் ரே எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து அணியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாளை (சனிக்கிழமை) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏஜியஸ் பவுலில் விளையாடவிருக்கும் பயிற்சி ஆட்டத்துக்காக இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது பீல்டிங் பயிற்சியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கனின் இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பயிற்சி முடிந்தவுடன் அவருக்கு எக்ஸ் ரே எடுக்கப்படவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்லிப்பில் நின்று கொண்டு கேட்சிங் பயிற்சி எடுத்த போது மோர்கனுக்கு இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. பந்து பட்டவுடன் மோர்கன் வலியில் இருந்தது தெரிந்தது. பிறகு களத்திலிருந்து அவர் உடனடியாக வெளியேறி சிகிச்சைக்குச் சென்றார்.
முன்னெச்சரிக்கையாக ஸ்கேனும் எடுக்கப்படவுள்ளது. இங்கிலாந்து அணியின் கடந்த 2 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகள் முன்னேற்றத்தில் கேப்டன் மோர்கனின் பங்கு அளவுக்கதிகமானது.
2015 உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகே அணியை வெற்றிப்பாதைக்குத் திருப்பி இன்று நம்பர் 1 அணியாக இருப்பதற்கு மோர்கன் ஒரு பிரதான காரணம். மேலும் உள்நாட்டில் நல்ல பார்மில் இருக்கும் இங்கிலாந்து இந்த வாய்ப்பை விட்டால் மீண்டும் உலகக்கோப்பைக்காக இப்படிப்பட்ட வலுவான அணியை உருவாக்குவது கடினம்.
இந்நிலையில் மோர்கனின் காயம் இங்கிலாந்து அணிக்கு பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.