Published : 17 May 2019 03:11 PM
Last Updated : 17 May 2019 03:11 PM
இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிக்கான பரிசுத் தொகை இதுவரை உலகக் கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ரூ.70 கோடியே 12 லட்சத்து82 ஆயிரம்(ஒரு கோடி அமெரிக்க டாலர்) அறிவிக்கப்பட்டது. இதில் இருந்து வெற்றி பெறும் அணி, 2-வதாக வரும் அணி ஆகியவற்றுக்கு பிரித்து அளிக்கப்படும்.
இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. வரும் 30ம் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ம் தேதிவரை நடக்கிறது.
இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் பிரிஸ்டல், கார்டிப், எட்ஜ்பாஸ்டன், டான்டன், சவுத்தாம்டன், லீட்ஸ், லண்டன், லண்டன் ஓவல், ஓல்ட் ட்ராபோர்ட், டின்ட் பிர்ட்ஜ், செஸ்டர் லீஸ்டீர்ட், நாட்டிங்காம் ஆகிய 11 மைதானங்களில் மொத்தம் 46 ஆட்டங்கள் நடக்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் எனும் ரவுண்ட் ராபின் அடிப்படையில் போட்டி நடக்கிறது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கிரிக்கெட் திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பரிசுத்தொகையை அதிகப்படுத்தி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.
பரிசுத்தொகை
இதன்படி உலகக் கோப்பைப்போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ஒரு கோடி அமெரிக்க டாலராக(ரூ. 70,12,82,000)அதிகரிக்கப்பட்டுள்ளது.சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 40 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 28,08,34,000.) பரிசாக வழங்கப்படும். 2-வதாக இடம் பிடிக்கும் அணிக்கு 20 லட்சம் டாலர்களும்(ரூ. 14,02,56,400) வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 5,61,02,560) வழங்கப்படும்.
லீக் போட்டிகளில்வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் அணிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் 40 ஆயிரம் டாலர்கள்(ரூ. 28,05,128) பரிசு வழங்கப்படுகிறது. லீக் சுற்றை கடந்துவிட்ட அணிகளுக்கு தலா ஒரு லட்சம் டாலர்கள்(ரூ. 70,12,820) பரிசு வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT