Last Updated : 15 May, 2019 05:17 PM

 

Published : 15 May 2019 05:17 PM
Last Updated : 15 May 2019 05:17 PM

ரிஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் ஏன்?- மவுனம் கலைத்த விராட் கோலி

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் ரிஷப் பந்துக்கு பதிலாக, மூத்த வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன் என்பதற்கான காரணத்தை கேப்டன்விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இளம் வீரர் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக்கில் இருவரில் யாரைத் தேர்வு செய்வார் தேர்வுக்குழுவினர் என்ற எதிர்பார்ப்பில் தினேஷ் கார்த்திக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்தனர்.

ஆனால், இளம் வீரர் ரிஷப் பந்த் கடந்த சில போட்டிகளில் அதிரடியாக பேட் செய்துவந்தாலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சதம் அடித்த அனுபவம் உடையவர் என்பதாலும், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. ஆனால், அனுபவத்தை காரணம் காட்டி ரிஷப்பந்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதேசமயம், தினேஷ் கார்த்திக் தேர்வு என்பது தோனிக்கான முதலுதவிப்பெட்டி போன்றதுதான என்பதை தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதாவது தோனிக்கு காயம் ஏதும் ஏற்பட்டால் மட்டுமே தினேஷ் கார்த்திக் களம்காண முடியும்அதுவரை பெஞ்சில்தான் அமர்வார், கூடுதல் பேட்ஸ்மேன் தேவை ஏற்பட்டால் மட்டும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், கேப்டன் எனும்முறையில் தினேஷ் கார்த்திக் தேர்வு  குறித்து இதுவரை எந்தவிதமான விளக்கமும் கோலி அளிக்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் அது குறித்து கோலி மவுனம் கலைத்துள்ளார். ராய்டர்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கோலி கூறுகையில், " தினேஷ் கார்த்திக்கை உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்ததற்கு முக்கியக் காரணம் அனுபவம். அணிக்குநெருக்கடியான நேரம், அழுத்தமான சூழலில் அமைதியாக இருந்து, நிதானமாக பேட் செய்யக்கூடிய அனுபவம், திறமை கொண்டவர்.

 இந்த ஒருவிஷயத்தை வாரியத்தில் இருந்த அனைவரும், தேர்வுக்குழுவினரும் ஒப்புக்கொண்டனர். அதனால், இயல்பாகவே தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தினேஷ் கார்த்திக்கிற்கு அனுபவம் இருக்கிறது. ஒருவேளை தோனிக்கு காயம் ஏற்பட்டு, அவரால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால், கார்த்திக் விக்கெட் கீப்பிங் பணியை கவனிக்க முடியும். ஒரு நல்ல பினிஷராக கார்த்திக் சிறப்பாக பணியைச் செய்யும் திறமை கொண்டவர் " எனத் தெரிவித்துள்ளார்.

33 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் தடம்பதித்தார். 2007-ம் ஆண்டுக்குப்பின் 2-வது முறையாக இப்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x