Published : 26 Sep 2014 09:06 PM
Last Updated : 26 Sep 2014 09:06 PM

உலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட் அணி இயக்குநராக ரவி சாஸ்திரி நீட்டிப்பு

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை இந்திய அணியின் இயக்குநராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நீடிப்பார் என்று பிசிசிஐ செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் தொடர், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடர், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியவற்றின்போது இந்திய அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி இருப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை பிசிசிஐ செயற்குழு கூட்டம் நடைபெற்றது. உலகக் கோப்பை வரை அணியின் தலைமைப் பயிற்சியாளராக டங்கன் பிளெட்சரும், உதவிப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், அருண், ஸ்ரீதர் ஆகியோரும் இருப்பார்கள் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை நவம்பர் 20-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தின்போதுதான் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி கண்டதைத் தொடர்ந்து உதவிப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜோ தேவ்ஸ், டிரெவர் பென்னி ஆகியோர் தங்களின் ஒப்பந்த காலம் முடியும் வரையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரியலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x