Last Updated : 10 Apr, 2019 04:54 PM

 

Published : 10 Apr 2019 04:54 PM
Last Updated : 10 Apr 2019 04:54 PM

ஐபிஎல் வீரர்கள் கோடிக்கணக்கில் ஊதியம் வாங்க சச்சின், கும்ப்ளே, திராவிட்தான் காரணம்: சேவாக் வெளிப்படை

ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கோடிக்கணக்கில் ஊதியம் பெறுவதற்கு சச்சின், கும்ப்ளே, திராவிட் நடத்திய போராட்டம்தான் காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சர்வதேச ப்ரீமியர் கபடி லீக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பங்கேற்றார். அப்போது ஐபிஎல் போட்டியிலும், அணியிலும் வீரர்கள் நல்ல ஊதியம் பெறுவதற்கான காரணத்தை வெளிப்படையாக விளக்கினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

''இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி வீரர்களுக்கு நல்ல ஊதியம் கிடைத்து வருகிறது. 17 ஆண்டுகளுக்கு முன் ஊதிய உயர்வுக்காக முன்னாள் வீரர்கள் நடத்திய போராட்டம்தான் இதற்குக் காரணம்.

தொடக்கத்தில் இந்திய வீரர்களுக்கு ஊதியமும், போட்டிகளில் வென்றால் கிடைக்கும் வருவாயில் குறைந்த அளவிலான பங்கு மட்டுமே கிடைத்து வந்தது. இதை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. உதாரணமாக 100 வீரர்கள் இருந்தால், வருவாயில் 20 சதவீதம் மட்டுமே பிசிசிஐ பிரித்து வீரர்களுக்குச் சரிசமமாக வழங்கும். இதுதான் நிரந்தர வருமானமாக இருந்து வந்தது. மற்ற வகையில், அணியில் இடம் பெறுவதைப் பொறுத்து ஊதியம் இருக்கும்.

ஆனால், இந்த வருவாயில் பங்குத் தொகையை அதிகப்படுத்தி 26 சதவீதமாக வழங்க வேண்டும் என்று நாங்கள் பிசிசிஐயிடம் போராடினோம். எங்களின் போராட்டத்தின் விளைவாக 26 சதவீதத்தை வழங்க பிசிசிஐ முன்வந்தது. இன்று கிரிக்கெட்டைக் காட்டிலும் எந்த விளையாட்டிலும் வீரர்களுக்கு இதுபோன்ற அதிகபட்ச பங்குத்தொகை கிடைக்காது.

கடந்த 2002-ம் ஆண்டு இந்த ஊதியப் பிரச்சினை, பங்குத் தொகை பிரச்சினை எழுந்தது. ஆனால், வீரர்களுக்கும், வாரியத்துக்கும் வெளிப்படையாக யாரும் பிரச்சினை செய்யவில்லை. இரு தரப்புக்கும் கிரிக்கெட் விளையாட்டு வளர வேண்டும், உலகில் சிறந்த வீரர்களாக, அணியாக நாம் திகழ வேண்டும் எனும் நோக்கம் பொதுவானதாக இருந்தது.

இன்று இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டியிலும் சரி வீரர்கள் சிறந்த ஊதியத்தைப் பெற்று வருகிறார்கள் என்றால் அதற்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட் உள்ளிட்ட சிலரின் போராட்டமும், விடாமுற்சியும்தான் காரணம்.  அவர்கள் போராடாமல் இருந்திருந்தால், ஐபிஎல் போட்டியிலும், இந்திய அணியிலும் வீரர்களுக்கு இதுபோன்ற கோடிக்கணக்கில் ஊதியம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை''.

இவ்வாறு வீரேந்திர சேவாக் பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x