Last Updated : 14 Apr, 2019 09:00 PM

 

Published : 14 Apr 2019 09:00 PM
Last Updated : 14 Apr 2019 09:00 PM

சிஎஸ்கேவுக்கு வெற்றி மேல் வெற்றி: நம்பிக்கை நட்சத்திரம் ரெய்னா, ஜடேஜா: கொல்கத்தா தோல்விக்கு வித்திட்ட 19-வது ஓவர்

சுரேஷ் ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம், ஜடேஜாவின் கடைசிநேர ஹாட்ரிக் பவுண்டரி ஆகியவற்றால், கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 7 வெற்றிகள், ஒரு தோல்வி என மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து 3-வது தோல்வியைச் சந்திக்கிறது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருப்புமுனை ரெய்னா

சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னாவின் அரைசதம், கடைசி நேரத்தில் ரவிந்திர ஜடேஜா அடித்த ஹாட்ரிக் பவுண்டரிகள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. ரெய்னா 58 ரன்களிலும், ஜடேஜா 31 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் ரெய்னா அடித்த சதம் ஐபிஎல் போட்டியில் 36-வது அரைசதமாகும். கொல்கத்தா அணிக்கு எதிராக 8-வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்னே வீசிய 4-வது ஓவரில் ரெய்னாவுக்கு ஸ்ட்ரைட் அம்பயர் எல்பிடபிள்யு முறையில் அவுட் வழங்கினார். அதை ரெய்னா டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்ய அது அவுட் இல்லை என்று முடிவுவந்தது. ரெய்னாவுக்கு கிடைத்த முடிவு ஆட்டத்தின்முக்கியத் திருப்புமுனையாகும்.

பராசக்தி எக்ஸ்பிரஸ்

4 விக்கெட்டுகளை வீழ்த்திய 'பராசக்தி எக்பிரஸ்' என்று அழைக்கப்படும் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதுவரை சிஎஸ்கே அணி மோதிய 8 போட்டிகளில் ராயுடு ஒரு போட்டியில் மட்டுமே நிலைத்து ஆடியுள்ளார். நாளை உலகக் கோப்பைக்கான அணித் தேர்வு இருக்கும் நிலையில், நடுவரிசைக்கு வலுவான வீரர்களில் ராயுடுவை தேர்வு செய்வதில் ஐபிஎல் போட்டியில் அவரின் செயல்பாடு எந்த அளவுக்கு தடையாக இருக்கும் என்பது கேள்விக்குறியே.

பொறுப்பான ஆட்டம்

121 ரன்களுக்கு தோனி உள்பட 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. தோனி ஆட்டமிழந்தபின் சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பும் குறைந்துவிட்டதாகவே எண்ணப்பட்டது. 4 ஓவர்களுக்கு 41 ரன்கள் தேவை என்ற நிலையில் ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.

 ரெய்னாவும், ஜடேஜாவும் இணைந்து நிதானமாக அணியை வழிநடத்திச் சென்றனர். அதிலும் குறிப்பாக குர்னே வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா அடித்த ஹாட்ரிக் பவுண்டரி ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசியாக மோதிய 3 ஆட்டங்களிலும் கடைசி ஓவரில்தான் சிஎஸ்கே அணி சேசிங் செய்து வென்றிருந்தது அதேபோலவே இந்த ஆட்டத்திலும் வென்றது.

கிறிஸ் லின் நாயகன்

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை கிறிஸ் லின் மட்டும் இன்று நிலைத்தா ஆடாவிட்டால், அணியின் நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கும். அணியின் 161 ரன்களில் பாதிக்கு மேற்பட்ட ரன் லின் சேர்த்ததாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் விரைவாக ஆட்டமிழந்தது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.

நாளை உலகக்கோப்பைக்கான அணித் தேர்வு இருக்கும் நிலையில், தினேஷ் கார்த்திக் கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரின் உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறும் வாய்ப்பை அருக வைக்கும்.

 ஒரு கட்டத்தில் நரேனும், சாவ்லாவும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியநிலையிலும் ஆட்டம் கொல்கத்தா பக்கமே இருந்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால், சிஎஸ்கே வெற்றியை பறித்தது.

அதிலும் குர்னே தான் வீசிய 19-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியை மட்டும் அடிக்கவிடாமல் இருந்திருந்தால், போட்டியின் முடிவே மாறி இருக்கும்.

விக்கெட் சரிவு

162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் வாட்ஸன், டூப்பிளசிஸ் தலா ஒருபவுண்டரி விளாசினார்கள். ரஸல் வீசிய 3-வது ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார் டூப்பிளசிஸ்.

குர்னே வீசிய 4-வது ஓவரில் எல்பிடபில்யு முறையில் வாட்ஸன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். 29 ரன்களுக்கு சிஎஸ்கே முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து ரெய்னா களமிறங்கி, டூப்பிளசிஸுடன் சேர்ந்தார். ரெய்னா களமிறங்கியது முதல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கினார்.

நரேன் வீசிய 6-வது ஓவரில் டூப்பிளசிஸ் போல்டாகி  24 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 44 ரன்கள் சேர்த்திருந்து. அடுத்து வந்த ராயுடுவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை.

10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்த 60 பந்துகளுக்கு  92 ரன்கள் தேவைப்பட்டது.

பியூஷ் சாவ்லா வீசிய 10-வது ஓவரில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் ஆட்டமிழந்தார் ராயுடு. அடுத்து  ஜாதவ் களமிறங்கினார். சாவ்லா வீசிய 10-வது ஓவரில் இரு பவுண்டரிகளும், குல்தீப் வீசிய 11-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் விளாசினார்.  சாவ்லா வீசிய 12-வது ஓவரில் எல்பிடபில்யு முறையில் ஜாதவ் 20 ரன்கள் ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு தோனி களமிறங்கி, ரெய்னாவுடன் சேர்ந்தார். தோனி தான் சந்தித்த முதல் ஓவரில் குல்தீப் ஓவரில் சிக்ஸர் விளாசினார். சாவ்லா வீசிய 14-வது ஓவரில் ரெய்னா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார்.

 நரேன் வீசிய 16-வது ஓவரில் தோனி 16 ரன்கள் சேர்த்த நிலையில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார். நிதானமாக பேட்செய்த ரெய்னா 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஹாட்ரிக் பவுண்டரி

19-வது ஓவரை குர்னே வீசினார். வெற்றிக்கு 12 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் ஜடேஜா ஹாட்ரிக் பவுண்டரி உள்பட 16 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிமைப்படுத்தினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. சாவ்லா வீசிய முதல் பந்தில் ஜடேஜா ஒரு பவுண்டரியும், அடுத்த 4 ரன்களும் ஓடி எடுக்க சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

19.4 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்ற பெற்றது. ரெய்னா 42 பந்துகளில் 58 ரன்களிலும்(ஒருசிக்ஸ், 7பவுண்டரிகள்), ஜடேஜா 5 பவுண்டரிகள் உள்பட 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா தரப்பில் சாவ்லா, நரேன், தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.முன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் கிறிஸ் லின் மட்டுமே நிலைத்து ஆடி 82 ரன்கள் சேர்த்தால். மற்ற வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரஸல், உத்தப்பா, ராணா, கில் ஆகியோர் நிலைத்து ஆடாததால், 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதிரடியாக ஆடிய கிறிஸ் லின் ஐபிஎல் போட்டியில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். 51 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் போட்டியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x