Last Updated : 23 Apr, 2019 04:59 PM

 

Published : 23 Apr 2019 04:59 PM
Last Updated : 23 Apr 2019 04:59 PM

நியூஸிலாந்து புறப்பட்டார் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன்: மும்பை அணியில் முக்கிய வீரர் இல்லை

ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியன் தனிப்பட்ட காரணங்களுக்காக நியூஸிலாந்து புறப்பட்டுச் சென்றார்.

12-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இந்த போட்டித் தொடர் முடிந்தவுடன் மே30-ம் தேதி உலகக் கோப்பைப் போட்டித் தொடரும் நடக்க இருப்பதால், ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் பல வெளிநாட்டு வீரர்கள் ப்ளே-ஆப் சுற்று முடிந்தவுடன் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்கின்றனர்.

ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தனது மனைவியின் பிரசவத்துக்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த மாத இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கும்,  ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கும் புறப்பட்டுவிடுவார்கள். 

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் கேன் வில்லியம்ஸன் தோள்பட்டை காயம் காரணமாக இந்த தொடரின் தொடக்கத்தில் சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதன்பின் பங்கேற்றாலும் வழக்கம் போல் அவரால் விளையாட முடியவில்லை.

தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த சன்ரைசர்ஸ் அணி கடந்த இரு ஆட்டங்களிலும் வென்று தற்போது 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இன்னும் அந்த அணிக்கு 5 போட்டிகள் இருக்கின்றன.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் அணி மோதுகிறது. ஆனால், இந்த ஆட்டத்தில்அணியன் கேப்டன் வில்லியம்ஸன் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவசரமாக நியூஸிலாந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வில்லியம்ஸன் புறப்பட்டு சென்றுவிட்டார்.ஆதலால், இன்றைய சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்ஸன் விளையாடமாட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை புவனேஷ்வர் குமார் ஏற்பார் எனத் தெரிகிறது.

இந்த போட்டியில் மட்டுமே வில்லியம்ஸன் விளையாடமாட்டார். ஜெய்ப்பூரில் வரும் 27-ம் தேதி நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்ஸன் விளையாடுவார் என சன்ரைசர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரும், மே.இ.தீவுகள் அணியைச் சேர்ந்தவருமன அல்சாரி ஜோஸப் கடந்த 13-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது, தோள்பட்டையில் ஜோஸப்புக்கு காயம் ஏற்பட்டது.

இதனால், தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக ஹென்ட்ரிக்ஸ் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x