Published : 18 Apr 2019 03:50 PM
Last Updated : 18 Apr 2019 03:50 PM

உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: ஒன்றரை ஆண்டுக்குப் பின் முக்கிய வீரர் அழைப்பு

இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் தொடங்கும் ஐசிசி உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அணியின் கேப்டனாக திமுத் கருணரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் 4 ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன்கள், ஒருவிக்கெட் கீப்பர், 6 ஆல்-ரவுண்டர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு ஸ்பெசலிஸ்ட் ஸ்பின்னர் கொண்ட கலவையில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பேட்ஸ்மேன்கள், லாகிரு திரிமானே, ஸ்லோ-பவுலிங் ஆல்ரவுண்டர் மிலின்டா ஸ்ரீவர்தனா, ஜீவன் மென்டிஸ், லெக் ஸ்பின்னர் வான்டர்சே ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் லெக்ஸ்பின்னர் வான்டர்சே கடந்த 2017, அக்டோபர் மாதத்துக்குபின் இலங்கை அணியில் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், இப்போது அணிக்கு திரும்பியுள்ளார்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை படுமோசமாக இலங்கை அணி இழந்தது. அப்போதிருந்த அணியில் இடம் பெற்ற நிரோஷன் டிக்வெல்லா, அகிலா தனஞ்செயா, தனுஷ்கா குணதிலகா, உபுல் தராங்கா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆல்ரவுண்டர், ஏஞ்சலோ மாத்யூஸ், திரிமானே, மெண்டிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதில், திரிமானே, கடந்த 2017 டிசம்பர் மாதத்துக்குப்பின் ஒருநாள் போட்டியில் விளையாடமல் இருந்து வருகிறார், உள்நாட்டுப் போட்டியில் சதம் அடித்த நிலையில் திரிமானே அழைக்கப்பட்டுள்ளார்.

மெண்டிஸ் கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் கேப்டன் தினேஷ் சந்திமால் அணியில் சேர்க்கப்படவில்லை.

இலங்கை அணி விவரம்:

திமுத் கருணரத்னே (கேப்டன்), ஏஞ்சலோ மாத்யூஸ், திசாரே பெரேரா, குஷால் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, குஷால் மென்டிஸ், இஸ்ரு உதானா, மிலின்டா ஸ்ரீவர்தனா, அவிஷ்கா பெர்ணான்டோ, ஜீவன் மென்டிஸ், லாஹிரு திரிமானே, ஜெப்ரி வான்டர்சே, லசித் மலிங்கா, நுவான் பிரதீப், சுரங்க லக்மல்

ஸ்டாண்ட் -பை வீரர்களான ஓஷதா பெர்ணான்டோ, ஏஞ்சலோ பெரேரா, கசுன் ரஜிதா, வானின்டு ஹசரங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x