

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷேன் வாட்சன் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 53 பந்துகளில் 96 ரன்கள் எடுக்க, பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், அதிரடி வீரர்களான பேர்ஸ்டோ, வார்னர் இருவரது விக்கெட்டுகளை வீழ்த்தியதும் வெற்றிக்கு முக்கியக் காரணமானது.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் வெற்றி குறித்து கூறியதாவது:
களத்தில் இறங்குவது என்பதே மகிச்சிதருவதுதான். எனக்கு உடல்நலம் குறைவு காரணமாக சில போட்டிகளில் ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டம், எனக்கு மட்டுமல்ல என் குடும்பமே உடல்நலமின்மையால் தவித்தது.
ஆகவே மீண்டும் இறங்கி ஆடியது சந்தோஷமாக உள்ளது, அதிலும் வெற்றி கூடுதல் மகிழ்ச்சி தருகிறது. 19வது ஓவரிலேயே ஆட்டத்தை வென்றிருப்போம், ஆனால் சிறிது நேரம் எங்கள் இதயங்களை சோதித்தனர்.
எப்படியோ... கடைசி ஓவர் ஆட்டத்தை எடுத்துச் செல்வது ஒரு மனப்பாங்கு ஆகிவிட்டது. முடிவு நமக்குச் சாதகமாக அமையும் வரை இது சரி. ஷேன் வாட்சன் இந்த ரன்களை எடுத்தது நல்லது. அவர் ஒரு சீரியஸான வீரர். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியை அவர் தனிநபராக வென்று கொடுத்தார். இந்த இன்னிங்ஸ் அவரது நம்பிக்கையை அதிகரிக்கும்.
சென்னையில் அவர் எப்போதும் நன்றாக ஆடுவார். நாங்களும் சென்னையில் நன்றாகவே ஆடுவோம். இந்தப் பிட்சை நாங்கள் நன்றாக அறிவோம். அருமையான ரசிகர்களுக்கு நன்றி.
சென்னைக்கு வந்து எங்களுக்கு எதிராக ஆடும் எதிரணியினர் எங்களை வெல்ல வேண்டுமெனில் எங்களைக் காட்டிலும் சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும். இல்லையெனில் கடினம்.
இவ்வாறு கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.