Published : 27 Apr 2019 05:19 PM
Last Updated : 27 Apr 2019 05:19 PM
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, மகளிர் அணி வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்க பிசிசிஐ அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது
உச்ச நீதிமன்றத்தால் அமைப்பட்ட நிர்வாகிகள் குழு இந்த முடிவை எடுத்து அதற்கான பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.
25-வயதான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று பும்ரா விளையாடி வருகிறார். அடுத்தமாதம் இறுதியில் இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலகக் கோப்பைப் போட்டியிலும் பும்ரா தலைமையில்தான் பந்துவீச்சு துறையே செயல்படப் போகிறது. 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 49விக்கெட்டுகளையும், 49 ஒருநாள் போட்டிகளில் 89 விக்கெட்டுகளையும், 42 டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தியுள்ளார்.
மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்திய அணிக்கு முக்கியமானவர். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா தொடர்களில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஷமியின் பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது. ஷமி இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளையும், 63 ஒருநாள் போட்டிகளில் 113 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 8 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 192 விக்கெட்டுகளையும், 1485 ரன்களையும் குவித்துள்ளார். 151 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 2035 ரன்களையும், 174 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 116 ரன்களும், 31 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அதேபோல மகளிர் கிரிக்கெட் அணியின் லெக்ஸ்பின்னர் பூனம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பூனம் 41 ஒருநாள் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும், 54 டி20 போட்டிகளில் 74 விக்கெட்டுகளை பூனம் கைப்பற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT