Last Updated : 27 Mar, 2019 07:24 AM

 

Published : 27 Mar 2019 07:24 AM
Last Updated : 27 Mar 2019 07:24 AM

மீண்டும் மெதுவான பிட்ச்: இரு அணிகளுமே திணறிய ஆடுகளத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது சிஎஸ்கே

வாட்ஸனின் அதிரடி பேட்டிங், பிராவோவின் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சு ஆகியவற்றால் டெல்லியில் நேற்று நடந்த 12-வது ஐபிஎல் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் இளமையான வீரர்களைக் கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது அனுபவ வீரர்களைக்கொண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தைப் போன்றே, ஏறக்குறைய டெல்லி ஆடுகளமும்  மெதுவான ஆடுகளமாக, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆடுகளத்தில் ரன்களை அடிக்க இரு அணி வீரர்களுமே சிரமப்பட்டனர். பெரும்பாலும்சுழற்பந்துவீச்சுக்கும், அவ்வப்போது வேகப்பந்துவீச்சுக்கும் ஒத்துழைத்தது.

ஐபிஎல் போட்டி என்பது ரசிகர்களுக்கு பேட்ஸ்மேன்கள் விருந்து படைப்பதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு டீசண்ட் ஸ்கோரில் மட்டைக்கும் பந்துக்குமான சவாலாக இருப்பது அவசியம்.  ஆனால், சிஎஸ்கே மோதிய  இரு போட்டிகளும் மெதுவான ஆடுகளம் அமைக்கப்பட்டு, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாற்றப்படுவது(உஷ்கண்டுகாதீங்க) ஏன் எனத் தெரியவில்லை. சிஎஸ்கே அணியிலும் அதிகமான அளவில் சுழற்பந்துவீச்சாளர்களும், ஆடுகளமும் மெதுவாக இருப்பதும் ஏன் எனத் தெரியவில்லை.

ஆனால் மீண்டும் ஒரு விறுவிறுப்பற்ற சொத்தை பிட்ச், சொத்தையான போட்டிதான் இதுவும். சிஎஸ்கே என்ற பிராண்ட் கட்டமைப்புக்கு இத்தகைய மந்தமான, அறுவையான போட்டிகள் உதவுமா என்று தெரியவில்லை.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது. 147 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 பந்துகள் மீதிமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி மைாதானத்தில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே பெறும் 6-வது வெற்றி இதுவாகும். ஒருகட்டத்தில் தோனி தொடர்ச்சியாக 5 பந்துகளில் ரன் எடுக்காமல் சாவதானமாக ஆடினார், முதல் பந்திலேயே எட்ஜ் ஆனார். எப்போது வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற இலக்கு.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வாட்ஸனுக்கும், டெல்லி அணி வீரர் ரபாடாவுக்கும் இடையே தொடக்கத்திலேயே முட்டிக்கொண்டது. ரபாடாவின் பவுன்ஸரை வாட்ஸன் விமர்சிக்க, பதிலுக்கு இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் தலையிட்டு பிரித்துவிட்டார்.

சென்னை சூப்பர் கிங்கிஸ் அணி இந்த சீசனில் பெறும் 2-வதுவெற்றி இதுவாகும். சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டிகளில் சேஸிங் செய்து பெறும் 44-வது வெற்றி இதுவாகும். இந்த 44 வெற்றிகளில் 25-வெற்றிகள் 20ஓவரில்தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியில் டக்அவுட் ஆகிய வாட்ஸன் இந்த போட்டியில் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 6ஓவர்கள் மட்டுமே நிலைத்தாலும் தனது காட்டடியில் 44 ரன்கள்(26பந்துகள், 3சிக்ஸர், 4 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார். வாட்ஸன் அளித்த தொடக்கம்தான் சென்னை அணிக்கு ஊக்கமாக அமைந்தது.

கடைசி 2ஓவர்களில் 11 ரன்கள் தேவை என்கிறபோது, நிதானமாக ஆடிய தோனி, எதிர்பாராமல் அடித்த சிக்ஸர் ஆட்டத்தில் வெற்றியை இலகுவாக்கியது. தனது அனுபவமான கேபிடன்ஷிப்பை இந்த ஆட்டத்தின் மூலம் தோனி உணர்த்திவிட்டார்.

இதில் முத்தாய்ப்பான விஷயம் என்னவென்றால், டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் தனது 50-வது விக்கெட்டை வீழ்த்தினார். ஒரே மைதானத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் அமித் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிரித்விஷா நல்ல தொடக்கத்தை அளித்தாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 10ஓவர்கள் வரை நின்றிருந்தால் ஆட்டம் திசை மாறியிருக்கும்.

மெதுவான ஆடுகளம் என்பதால், பேட்ஸ்மேன்கள் நினைத்தது போன்று பந்துகள் வேகமாக வரவில்லை. இதனால், ஷிகர் தவண், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பந்த், இங்க்ராம் ஆகியோர் அடித்த ஷாட்கள் கணிப்பை மீறி கேட்சுகளாக மாறின. அதனால்தான் 119 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவாக இருந்த டெல்லி அணி பிராவோவின் கணிக்க முடியாத பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை 8 ரன்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

 

தனது அனுபவமான ஆட்டத்தால் ஷிகர் தவண் பொறுமையாக ஆடி ஐபிஎல் போட்டியில் 33-வது அரைசதம் அடித்தது மட்டுமே ஆறுதலாக விஷயம். அதேசமயம், 2 முக்கியமான கேட்சுகளையும் தவண் பிடிக்கத் தவறியதையும் சொல்லியாக வேண்டும்.

டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் ஸ்கோர் செய்ய முயன்றும், பந்துகளை குறித்த இடத்துக்குள் தள்ள முடியாமல் சிரமப்பட்டனர். இதே சிரமத்தை சிஎஸ்கே வீரர்களும் அடைந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு இந்த போட்டியில் கட்டுக்கோப்பாக இருந்தது. ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, தாஹிர், பிராவோ ஆகியோர் நடுப்பகுதியில் டெல்லி அணி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினார்கள்.

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. பிரித்விஷா, தவண் நல்ல தொடக்கம் அளித்தனர். கடந்த போட்டியில் ஏமாற்றிய பிரித்வி ஷா, இந்த முறை ஷர்துல்தாக்கூர் வீசிய 2-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால் நிலைக்காத பிரித்வி ஷா 4பவுண்டரி உள்பட 16 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹர் பந்துவீச்சில் மிட்விக்கெட் திசையில் வாட்ஸனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் வந்து, தவணுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்ரேட்டை 6 –க்கு குறையாமல் கொண்டு சென்றனர். ஆனால், ஆடுகளம் ெமதுவாக இருந்ததால், பேட்ஸ்மேன்களால் நினைத்த ஷாட்களை அடிப்பதில் சிரமம் இருந்தது. சுழற்பந்துவீச்சுகுக்கு சாதகமாக இருந்ததால், ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் பந்துவீச்சை எதிர்கொள்ள ஸ்ரேயாஸ், தவண் சிரமப்பட்டனர்.

இம்ரான் தாஹிர் வீசிய 12-வது ஓவரில் இரு பவுண்டரிகளை தவண் விளாசினார். அதே ஓவரில் 5-வது பந்தைச் சந்தி்த்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார். இருவரும் 43 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி, தவணுடன் சேர்ந்தார். ரிஷப் பந்த் அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்தாலும், மும்பையில் அடித்தது போன்று ரிஷப்ப்ந்தால் அடிக்க முடியவில்லை.

பிராவோ வீசிய 14-வது ஓவரில் தவண் 2பவுண்டரிகளும், பந்த் ஒரு பவுண்டரியும் அடித்து 17 ரன்கள் சேர்த்தனர். ஹர்பஜன் வீசிய 15-வது ஓவரில் தவண் ஒரு சிக்ஸர் விளாசினார். அதன்பின் பிராவோ கட்டுக்கோப்பாக பந்துவீசத் தொடங்கினார்.

பிராவாவோ வீசிய 16-வது ஓவரில் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஷப்பந்த், லெக்திசையில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த இங்கராம் வந்த வேகத்தில் 2 ரன் சேர்தது ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கீமோ பால் களமிறங்கினார்.

ஜடேஜா வீசிய 17-வது ஓவரில் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் கீமோ ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த தவண் அடித்து ஆடும் முடிவில் இருந்தார்.  பிராவோ வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் லெக்திசையில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து தவண் 51 ரன்னில் வெளியேறினார். படேல் 9 ரன்னிலும், திவேஸியா 11 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. வாட்ஸன், ராயுடு ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இசாந்த் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே ராயுடு அடித்த பந்தை ஸ்லிப்பில் நின்றிருந்த தவண் கேட்ச்பிடிக்க தவறினார்.

 

படேல் வீசிய –2-வது ஓவரில் வாட்ஸன் தனது அதிரடியால் 2 பவுண்டரிகள் விளாசினார். இசாந்த் சர்மா வீசிய 3-வது ஓவரில் ராயுடு 5 ரன்கள் சேர்த்தநிலையில் மிட்விக்கெட்திசையில் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரெய்னா களமிறங்கினார்.

ரபாடா வீசிய 4-வது ஓவரில் வாட்ஸன் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இந்த ஓவரில் ரபாடாவுக்கும், வாட்ஸனுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட அதை ஸ்ரேயாஸ் அய்யர் தலையிட்டு தீர்த்துவைத்தார்.

இசாந்த் சர்மா வீசிய 5-வது ஓவரில் ரெய்னா ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். 7-வது ஓவரை அமித் மிஸ்ரா வீசினார். இந்த ஓவரில் 2 அபாரமாக சிக்ஸர்களை அடித்த வாட்ஸன், 44 ரன்கள்(4பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) சேர்த்தநிலையில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து ஜாதவ் களமிறங்கி, ரெய்னாவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். ரெய்னா அவ்வப்போது பவுண்டரிகள் விளாசினார். திவேஸியா வீசிய 10-வது ஓவரில் ரெய்னா பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ரன்ரேட்டை நிலைப்படுத்தினார்.

ஆனால், அமித் மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் பந்திடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். அடுத்து தோனி களமிறங்கி, ஜாதவுடன் சேர்ந்தார். தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் ஆனால் இது எட்ஜ் பவுண்டரி.  இருவரும் மிகவும் பொறுமையாக பேட் செய்தனர், அதன்பின் 7 ஓவர்களாக பவுண்டரிகள் அடிக்காமல்,  சிங்கில் ரன்களாகவே இருவரும் சேர்த்தனர்.

ராபாடா வீசிய 14-வது ஓவரில் மிட்விக்கெட்டில் நின்றிருந்த தவண், ஜாதவ் அடித்த பந்தை கேட்ச்பிடிக்க தவறவிட்டார். இந்த போட்டியில் 2-வது முறையாக கேட்ச்சை நழுவவிட்டார்.

கீமோ பால் வீசிய 18-வது ஓவரில் தோனி 2-வது பவுண்டரியை அடித்தார். கடைசி இரு ஓவர்களில் 11 ரன்கள் தேவைப்பட்டது. மிஸ்ரா வீசிய 19-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும் அடித்து டென்ஷனைக் குறைத்தார்.

கடைசி ஓவரை ரபாடா வீசினார். முதல் பந்தில் ரிஷப்பந்திடம் ஜாதவ் கேட்ச் கொடுத்து 27 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிராவோ 4-வது பந்தில் பவுண்டரி அடிக்க சிஎஸ்கே வெற்றி பெற்றது. 2 பந்துகள் மீதமிருக்கையில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தோனி 32 ரன்களிலும், பிராவோ 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தன். டெல்லி அணிதரப்பில் மிஸ்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x