Last Updated : 24 Mar, 2019 05:08 PM

 

Published : 24 Mar 2019 05:08 PM
Last Updated : 24 Mar 2019 05:08 PM

ஜெய்ப்பூரில் நாளை; ஸ்மித்துடன் வலுவாக களமிறங்கும் ராஜஸ்தான்: கெயிலை நம்பும் அஸ்வின் அணி சமாளிக்குமா ?

ஜெய்ப்பூரில் நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையை முடித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் போட்டியில் நாளை களமிறங்குகிறார்.

ஸ்மித்தின் வருகையால் அசுரபலம் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்மித் விளையாடவில்லை. ஆனால், வங்கதேசத்தில் நடந்த பிபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தும், முழங்கை காயத்தால் விலகினார். முழுமையான லீக் தொடரில் ஒரு ஆண்டுக்குப் பின் ஸ்மித் பங்கேற்றும் தொடர் ஐபிஎல் போட்டியாகத்தான் இருக்கும்.

ஸ்மித், வார்னர் இருவரின் பேட்டிங் ஃபார்ம் அனைத்து நாட்டு அணிகளாலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இருவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை இம்மாதக் கடைசியில் விலகுவதால், இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் இருவரும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடக்கூடும் எனத் தெரிகிறது.

ஸ்டீவ் ஸ்மித் வருகைக்குப் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் வரிசை அசுரபலம் பெற்றுள்ளது.இது நிச்சயம்  அஸ்வின் தலைமையிலான அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

இதுதவிர பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் இருப்பது அணிக்கு கூடுதல் வலிமை. ஆனால், ஏப்ரல் 25-ம் தேதிக்குப் பின் இருவரும் உலகக்கோப்பை போட்டிக்காக இங்கிலாந்து சென்றுவிடுவார்கள். அதற்குள் முக்கிய லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி வென்றாக வேண்டும்.

பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் முக்கிய துருப்பாக இருப்பார், மேலும் சாம் கரன், சஞ்சு சாம்ஸன், ஆஸ்டன் டர்னர், ஸ்ரேயாஸ் கோபால் என பேட்டிங் வரிசைக்குப் பலம் சேர்க்கின்றனர்.

பந்துவீச்சில் ஜெயதேவ் உனத்கத், வருண் ஆரோன், தவால் குல்கர்னி, ஜோப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி, பென் ஸ்டோக்ஸ் என பல்வேறு வகைகளில் பந்துவீசும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆதலால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகுந்த வலிமையுடன் தனது முதல் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் கெயில், கே.எல். ராகுல் ஆட்டத்தை பெரிதும் நம்பி இருக்கிறது. இவர்கள் தொடக்கத்தில் கொடுக்கும் அழுத்தம், அதிரடி அடுத்துவரும் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும். இவர்கள் தவிர கருண் நாயர், மயங்க் அகர்வால் டேவிட் மில்லர் ஆகிய சொல்லிக்கொள்ளும் வகையில் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். மற்றவகையில் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு வலிமையாக பஞ்சாப் அணி இல்லை.

அதேசமயம் பந்துவீச்சில் முகமது ஷமி, ஆன்ட்ரூ டை, அஸ்வின், முருகன் அஸ்வின், முஜிப்உர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். ஆனால், வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்னால் எந்த அளவுக்கு ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x