Published : 22 Mar 2019 05:43 PM
Last Updated : 22 Mar 2019 05:43 PM
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடைவிதித்தமைக்கு பதிலடியாக, ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
இதை அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரி உறுதி செய்துள்ளார்.
புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்தி தற்கொலைப்படைத்தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக இந்தியாவில் பாகிஸ்தான் ப்ரிமியர் லீக் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றிருந்த டி-ஸ்போர்ட் நிறுவனத்தை ஒளிபரப்பை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், சர்வதேச அளவில் பிஎஸ்எல் போட்டியை ஒளிபரப்பு செய்வதற்கு ரிலையனஸ் நிறுவனம் உரிமை பெற்றிருந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தில் இருந்து திடீரென விலகியது. அதற்கு பதிலடியாக இப்போது பாகிஸ்தான் அரசு செய்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறுகையில், " பாகிஸ்தான் சூப்பர் லீக் நடந்த போது, இந்திய நிறுவனங்கள் இந்தியாவில் ஒளிபரப்ப முயன்றபோது, பாகிஸ்தான் கிரிக்கெட்டை இந்திய அ ரசு எவ்வாறு நடத்தியதோ அதேபோலத்தான் இப்போது நாங்களும் நடந்து கொள்கிறோம். பாகிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதை அனுமதிக்க முடியாது. கிரிக்கெட் விளையாட்டை இந்திய அணி அரசியலாக்கிவிட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது ராணுவத் தொப்பி அணிந்து அரசியல் செய்துவிட்டார்கள். நாங்கள் கிரிக்கெட்டையும், அரசியலையும் தனித்தனியாகப் பார்க்கிறோம். ஆனால், கிரிக்கெட்டோடு அரசியல் கலப்பு செய்த இந்திய அணி மீது நடவடிக்கை ஏதும் ஐசிசி எடுக்கவில்லை. பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாவிட்டால் அது ஐபிஎல் அமைப்பும், இந்திய கிரிக்கெட்டுக்கும்தான் இழப்பு. சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள்தான் சூப்பர்பவராக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT