Last Updated : 12 Mar, 2019 04:24 PM

 

Published : 12 Mar 2019 04:24 PM
Last Updated : 12 Mar 2019 04:24 PM

என்னுடைய அம்மா நன்றாகத் தமிழ் பேசுவார்: மே.இ.தீவுகளுக்கு ஆடிய இந்திய வம்சாவளி வீரர் ஆல்வின் காளிச்சரண்

மே.இ.தீவுகளின் கிரேட் பிளேயர் வரிசையில் இடம்பெற்றவர் ஆல்வின் காளிச்சரண். இவரது தாயார் பத்மா சென்னையைச் சேர்ந்தவர், தன் அம்மா நன்றாகத் தமிழ் பேசுவார் என்கிறார் ஆல்வின் காளிச்சரண்.

 

மார்ச்21ம்  தேதி காளிச்சரணுக்குப் பிறந்த தினம், அதற்காக அவர் தன் தாய்மண்ணுக்குத் திரும்பியுள்ளார்.

 

காளிச்சரணின் அம்மா பத்மா சென்னையில் பிறந்தவர், ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதும் காளிச்சரணுக்கு கொண்டாட்டமும் ஒரு வித இழந்ததை நினைக்கும் மனநிலையும் ஒருங்கே ஏற்படும்.

 

அகத்தூண்டுதல்:

 

என் அம்மா சென்னையைச் சேர்ந்தவர் நல்ல தமிழ் பேசுவார். என் வாழ்க்கைக்கு அவர்தான் அகத்தூண்டுதலாக இருந்தார், ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் என் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தத் தவறுவதில்லை.

 

தன் தாயார் பத்மாவின் நினைவாக காளிச்சரண் தன் சுயசரிதை நூலான கலர் பிளைண்ட் என்ற நூலை வெளியிடவிருக்கிறார். தன் 70வது பிறந்த தினத்தில் வெளியாகும் இந்த சுயசரிதையில் தன் கிரிக்கெட் வாழ்க்கைப் போராட்டங்களும் வெற்றிக்கணங்களும் உள்ளடங்கும் என்கிறார்.

 

“கிரிக்கெட்டில் நான் நிறம், இனம் ஆகியவற்றைப் பார்த்ததில்லை. ஆகவே நான் நிறக்குருடு” என்றார் இதனால்தான் தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான நிறவெறி தலை விரித்தாடிய போது அவர்களுக்கு எதிரான கிரிக்கெட் தடை செய்யப்பட்டிருந்த போதும் ஒரு அணியை அங்கு அழைத்துச் சென்று சர்ச்சைக்குள்ளானார்.

 

இது பற்றி அவரிடம் தி இந்து (ஆங்கிலம்) கேட்ட போது, “நாங்கள் சுவீட்டோவுக்குப் பயணம் செய்தோம் பிற பகுதிகளிலும் கருப்பரின மக்கள் டாப் கிரிக்கெட் வீரர்கள் ஆட்டத்தைப் பார்த்ததில்லை. அந்தப் பயணம்தான் அங்கு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியது. இன்னும் சொல்லப்போனால் அந்தப் பயணம்தான் தென் ஆப்பிரிக்கா சர்வதேச கிரிக்கெட்டுக்குள் மீண்டும் வருவதை துரிதப்படுத்தியது” என்றார்.

 

ஆனால் அந்த கொந்தளிப்பான காலக்கட்டங்களை கடந்து வந்து விட்டதாகவும் இப்போது ஆன்மீக வழிக்க்குத் திரும்பிவிட்டதாகவும் கூறிய ஆல்வின் காளிச்சரண்,  “நான் சீரடி, புட்டப்பர்த்தி சாய்பாபாக்களின் தீவிர பக்தன்” என்றார்.

 

5 அடி 4 அங்குலமே உயரம் இருந்தாலும் இடது கை வீரரான ஆல்வின் காளிச்சரன் ஹெல்மெட் போடாமல் உலக வேகப்பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கியதை மறக்க முடியாது.  1975 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் கோபாவேச வேகப்பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி, காளிச்சரணை நோக்கி ஆபாசமான வசையை உதிர்க்க கோபக்காரரான ஆல்வின் காளிச்சரண் லில்லியை அடித்து நொறுக்கியதை மறக்க முடியாது. ஹூக், புல், ஸ்லாக் ஸ்வீப் ,கட்கள், பேக்ஃபுட் பஞ்ச்கள், என்று பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆல்வின் காளிச்சரண்.

 

டெனிஸ் லில்லியை 4, 4, 4, 4, 4, 1, 4, 6, 0, 4 என்று காட்டு காட்டினார் காளிச்சரண். 10 பந்துகளில் அவரை மட்டும் 35 ரன்கள் விளாசல்.

 

“அவர் வார்த்தையைப் பிரயோகித்தார், நான் அவரை அடித்து நொறுக்க முடிவெடுத்தேன். ஹெல்மெட்டும் இல்லை மனதில் பயமும் இல்லை. அவர் கோபத்தில் ஏதேதோ கூறினார், நான் அவற்றை இப்போது இங்கே கூற முடியாது. அன்று என் தினம்” என்கிறார் ஆல்வின் காளிச்சரண்.

 

“என் காலத்தில் நான் எதிர்கொண்டதில் அதிவேக பவுலர் ஜெஃப் தாம்சன், அவருக்குப் பிறகு மைக்கேல் ஹோல்டிங். பிட்ச்கள் அதிவேகமாக இருக்கும், பந்துகள் பறக்கும். ஆனால் வேகப்பந்து வீச்சின் தந்தை என்றால் அது ஆன்டி ராபர்ட்ஸ்தான். அவரிடமிருந்து அனைவரும் கற்றுக் கொண்டனர். அவர் முழுநிறைவனா வேகப்பந்து வீச்சாளர்.

 

காளிச்சரண் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராகவும் சிறந்த பேட்டிங் உத்தியை வெளிப்படுத்தியவர், “பிஷன் பேடி தன் பலவகையான பந்துகள் மூலம் நம்மை ஆட்டிப்படைப்பார், எராப்பள்ளி பிரசன்னா பந்து காற்றில் பாம்பு போல் மூச்சு விடும். சந்திரசேகர் முற்றிலும் வித்தியாசமான ஒரு பவுலர்” என்றார்.

 

விவ் ரிச்சர்ட்ஸ்தான் உலகின் மிகச்சிறந்த ஆக்ரோஷ பேட்ஸ்மென் அவருடன் தான் யாரையும் ஒப்பிட விரும்பவில்லை என்று கூறும் காளிச்சரண், ”விவ் ரிச்சர்ட்ஸ் களத்தில் நிற்கிறார் என்றால் அது வேறொரு விஷயம்தான்” என்றார். அதே போல் கிரெக் சாப்பல்,  ‘பேலன்ஸ் மற்றும் அனாயாசம்” என்று கூறும் காளிச்சரண், இயன்சாப்பல் மற்றும் டைகர் பட்டவ்டி ஆகியோர் ஆக்ரோஷமான கேப்டன்கள் என்றார்.

 

யுஎஸ்.-ல் பயிற்சியாளராக இருக்கும் ஆல்வின் காளிச்சரணின் இளம் வீரர்களுக்கான ரத்தினச் சுருக்க எளிய அறிவுரை இதுதான்:  ‘ஷாட்களை ஆடுங்கள் ஆனால் தடுத்தாடவும் எப்போதும் கற்றுக் கொள்ளுங்கள்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x