Published : 01 Mar 2019 05:06 PM
Last Updated : 01 Mar 2019 05:06 PM

எனக்காக இடது கையிலும் வீசிக் காட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்தார்:   ‘நல்லாசிரியன்’ ஷேன் வார்ன் குறித்து குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி

அயல்நாடுகளில் நம் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் யாதவ்தான் என்று ரவிசாஸ்திரி கூறிய பிறகே உற்சாகமாகி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் குல்தீப் யாதவ். இந்தியாவில் வீசப்படும் பந்தின் தன்மை, ஆஸ்திரேலியாவின் கூகபரா பந்துகள், இங்கிலாந்தின் டியூக் பந்துகள் என்று வித்தியாசங்களைத் தான் அறிந்து கொண்டது எப்படி.. ஷேன் வார்ன் தனக்கு நல்லாசிரியன் என்று கூறியதோடு, இன்றளவிலும் கூட தன்னிடம் அவர் தொடர்பு கொண்டு கிரிக்கெட் பற்றி உரையாடுகிறார் என்றார்.

 

ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்திற்கு குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியதாவது:

 

என் சிறுபிராயத்திலிருந்தே நான் ஷேன் வார்ன் பந்துவீச்சைப் பார்த்து வருகிறேன், என் பயிற்சியாளர் ஷேன் வார்ன் வீடியோக்களை நான் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். புனே டெஸ்ட் போட்டியின் போது 2017-ல் முதல்முறையாக நேரில் பார்த்தேன். அப்போது பவுலிங்கின் பலதரப்பட்ட விஷயங்களையும் பேசினோம்.

 

இந்த முறை ஆஸ்திரேலியா சென்றிருந்த போது ரவி சாஸ்திரி, ஷேன்வார்னுடன் என்னைச் சந்திக்க வைத்தார். அப்போது முதலே ஷேன் வார்ன் எனக்கு நிறைய ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் வழங்கி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நான் எப்படி வீச வேண்டும் என்ற நுணுக்கங்களையும் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

 

டெஸ்ட் போட்டிகளின் போது ஒவ்வொரு நாள் காலையும் ஷேன் வார்னைச் சந்தித்தேன். என் பந்துவீச்சு முறையை அவர் பரிசோதித்தார். பலதரப்பட்ட சூழ்நிலைகளில் வீசுவது எப்படி என்று ஆலோசனை வழங்கினார். அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி வீசுவது, என் உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என்று பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். நெருக்கடியில் இருக்கும் போது அமைதியாக புன்னகையுடன் இருக்குமாறு எனக்கு அறிவுறுத்தினார்.

 

என் பந்து வீச்சின் போது தோள்பட்டை நிலையை கொஞ்சம் சரி செய்ய வேண்டும் என்றார். நாம் அடிக்கடி வீசும் பந்து, கூக்ளி, பிளிப்பர் என்று எதுவீசினாலும் லெந்த் எப்படியிருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.  அப்பப்பா, அவர் ஒரு என்சைக்ளோபீடியாதான். எனக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக அவர் இடது கையிலும் வீசிக்காட்டினார்.

 

இப்போது கூட அவ்வப்போது எனக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவார். வாட்ஸ் அப்பில் அவருடன் தொடர்பில் இருக்கிறேன். அவரது ஆதரவு எனக்கு முழுபலத்தை அளிக்கிறது.

 

இவ்வாறு கூறினார் குல்தீப் யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x