Published : 05 Mar 2019 10:43 AM
Last Updated : 05 Mar 2019 10:43 AM
இந்திய அணிக்கு ‘ஜால்ரா’ தட்டும் வர்ணனையாளர்கள் மலிந்து வரும் காலக்கட்டத்தில், தொலைக்காட்சிகளும் அவர்களுக்குத்தான் அதிக முன்னுரிமை வழங்கி வரும் இக்காலத்தில் சஞ்சய் மஞ்சுரேக்கர் பெரிய அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு இந்திய அணி நிர்வாகம், தேர்வு முறைகள் குறித்து விமர்சனங்களை வைத்து வருவது வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது தன் ட்விட்டர் பக்கத்தில், ஒருநாள் போட்டியின் நீளம் குறித்து கேள்வி எழுப்பி 10 ஒவர்கள் அதிகம்தான் என்றார். ஒருவேளை 99/4 என்ற நிலையில் 236 ரன்களை இந்தியா இழுத்து இழுத்து வென்றதில் அவர் சோர்வடைந்திருக்கலாம்.
சஞ்சய் மஞ்சுரேக்கர், “50 ஓவர் கிரிக்கெட் எப்போதும் 10 ஓவர்கள் அதிகமாக ஆடப்படுவதாகவே கருதுகிறேன்” என்று கருத்து தெரிவித்திருந்தார் தன் ட்விட்டரில்.
சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்..
ஒருவர், “நீங்கள் வர்ணனையில் இருக்கும் போது கூட நான் என் நண்பர்களிடத்தில் இதைத்தான் கூறுவேன்” என்று கிண்டலடித்துள்ளார்.
இன்னொருவர் ‘40 ஓவர்களுக்குப் பிறகு டிவியை அணைத்து விட வேண்டியதுதானே’ என்று கிண்டலடித்துள்ளார்.
“நீங்கள் வர்ணனை அளிக்கும் போது 10 ஓவர்களே 50 ஓவர்கள் போன்ற சோர்வை அளிக்கிறது” என்று இன்னொருவர் சாத்தியுள்ளார்.
“50 ஓவர் கிரிக்கெட்தான் நீண்டகாலமாக உங்கள் செலவுகளைச் சரிகட்டி வருகிறது, அதில் போய் பரிசோதனைகள் செய்யலாமா?”
“பாருங்கள்! யார் கூறுகிறார்கள் இதை என்று, ஒருநாள் கிரிகெட்டை டெஸ்ட் போல் ஆடிய ஒருவர் இப்படிக் கூறுகிறார்”
இவ்வாறாக நெட்டிசன்களிடம் சிக்கிச் சின்னாப்பின்னமானார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் தோனிக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கூறி மாட்டிக்கொண்டார். நெட்டிசன்கள் பிய்த்து எடுத்தனர், பின்னே தோனியைச் சொன்னால் சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT