Published : 26 Mar 2019 05:40 PM
Last Updated : 26 Mar 2019 05:40 PM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் ரஷிக் சலாம் அடுத்த சில ஆண்டுகளில் பெயர் சொல்லும் ஒரு பவுலராக எழுச்சிபெறுவார் என்று அவரது சக மும்பை இந்தியன்ஸ் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
திங்களன்று ரிஷப் பந்த் பேட்டிங்கில் காட்டுத்தனமாக அடித்த தினத்தின் போட்டியில் ரஷிக் சலாம் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடினார். 4 ஓவர்களில் 42 ரன்களைக் கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.
இந்நிலையில் யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் டிவியில் கூறியிருப்பதாவது:
“ரஷிக் வலைப்பயிற்சியில் பந்துகளை ஸ்விங் செய்தார். அதனால்தான் அவர் விளையாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கடைசி 2 பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி கொடுத்தார், மற்றபடி நன்றாகத்தான் வீசினார்.
முதல் போட்டியில் அழுத்தத்தை நன்றாகக் கையாண்டார். சர்வதேசப் போட்டி போல்தான் அந்தப் போட்டி இருந்தது. அடுத்த 2-3 ஆண்டுகளில் அவர் இன்னும் சிறப்பான ஒரு திறமையாக வளர்ந்து விடுவார்” என்றார் யுவராஜ் சிங்.
மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் இயக்குநர் ஜாகீர் கான் கூறும்போது, “ரோஹித் சர்மாவும் ரஷிக் பவுலிங்கில் ஈர்க்கப்பட்டார். அவருக்கு முன்னதாகவே வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். அவருக்கு உற்சாகமான காலக்கட்டங்கள் இருக்கின்றன” என்றார்.
நியூஸி. முன்னாள் பவுலரும் மும்பை அணியின் பவுலிங் பயிற்சியாளருமான ஷேன் பாண்டும் ரஷிக் சலாமின் திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT