Published : 12 Mar 2019 11:30 AM
Last Updated : 12 Mar 2019 11:30 AM
ராணுவ தொப்பி அணிந்து விளையாட இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது இந்திய அணியினர் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பி அணிந்து விளையாடினர்.
மேலும், இந்த ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கவும் கோலி தலைமையிலான அணியினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து கிரிக்கெட் விளையாடியதை பாகிஸ்தான் அமைச்சர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) வலியுறுத்தினர்.
இதனிடையே ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி தருமாறு ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கோரிக்கை விடுத்திருந்தது. இதை விசாரித்த ஐசிசி, இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடலாம் என நேற்று அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக ஐசிசி பொது மேலாளர் (திட்டத் தொடர்பு) கிளேர் பர்லாங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
பிசிசிஐ விடுத்துள்ள கோரிக்கையை ஐசிசி ஏற்கிறது. அதன் படி இறந்த ராணுவ வீரர்கள் நினைவாக ராணுவ தொப்பியை இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாடலாம். இதற்கு ஐசிசி அனுமதி அளிக்கிறது. இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT