Published : 05 Mar 2019 10:20 PM
Last Updated : 05 Mar 2019 10:20 PM

கடைசி ஓவரில் நம்பிக்கையைக் காப்பாற்றிய விஜய் சங்கர்: நல்ல நிலையிலிருந்து விக்கெட்டுகளை தூக்கி எறிந்த ஆஸி. - இந்தியா ‘த்ரில்’ வெற்றி

கடைசி வரை விறுவிறுப்பாகச் சென்ற நாக்பூர் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை வீசிய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், ஸ்டாய்னிஸ் மற்றும் ஸாம்ப்பாவை வீழ்த்தி 3 பந்துகளில் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று அவர் மீது கோலி வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார். 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

 

முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் அற்புதமான தனிமனித போராட்ட சதத்தினால் 250 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

கடைசி ஒவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், பும்ரா, ஷமி ஆகியோர் ஓவர்களை நிறைவு செய்ய, இந்திய அணி கேப்டனுக்கு இரண்டு வாய்ப்புகளே இருந்தன ஒன்று அரைக்கை பவுலர் கேதார் ஜாதவ்விடம் கொடுக்க வேண்டும் அவரும் தன் ஒவர்களை சிக்கனமாக வீசி 8 ஓவர்கள் 33 ரன்கள் உஸ்மான் கவாஜா விக்கெட்டை முக்கிய கட்டத்தில் வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்தினார். இன்னொரு தெரிவு தன் ஓரே ஓவரில் 13 ரன்களை 4 பந்துகளில் வாரி வழங்கிய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்.

 

ஆஸ்திரேலிய அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மார்கஸ் ஸ்டாய்னிஸ், இவர் 65 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார், இவர்தான் விஜய் சங்கரை எதிர்கொண்டார். விஜய் சங்கர் கடும் நெருக்கடியில் ஒரு அருமையான பந்தை வீசினார். புல் ஷாட் ஆடுவதற்கான ஷார்ட் பிட்சும் அல்ல, தூக்கி அடிப்பதற்கான புல் லெந்த் பந்தும் அல்ல, இடைப்பட்ட ஒரு பந்தை ஸ்டாய்னிஸ் மட்டையில் வாங்கத் தவறினார் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். அவர் ரிவியூ பலனளிக்கவில்லை. 2வது பந்தில் ஆடம் ஸாம்பா 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து மிடில் ஸ்டம்பில் கிரீஸில் பிட்ச் ஆனது ஸாம்ப்பா ஒதுங்கிக் கொண்டு பாயிண்டில் அடிக்க நினைத்தார், கோட்டை விட்டார் ஸ்டம்பைப் பந்து தாக்க விஜய் சங்கர் தன் வாழ்நாளில் அதி அழுத்த ஓவரில் கேப்டன், அணியினரின் நம்பிக்கையை காப்பாற்றினார். 8ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

 

3 ஒவர்களில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் 48வது ஓவரில் ஸ்டாய்னிஸுக்கு பும்ரா வீசிய ஓவர் சர்வதேச தரத்திற்கு  சற்றும் குறைவில்லாதது, அந்த ஓவரில் ஸ்டாய்னிஸினால் பும்ராவை ஒன்றும் செய்ய முடியவில்லை 1 ரன் தான் எடுக்க முடிந்தது. அதற்கு அடுத்த ஷமி ஓவரில் 9 ரன்கள் வந்தது. கடைசி ஓவரில் 11 என்ற நிலையில் விஜய் சங்கரை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறதோ என்று நாம் யோசிக்க மைதானத்தில் ரசிகர்கள் அய்யய்யோ இவரா கடைசி ஓவரை வீசப்போகிறார் என்று அதிர்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் பார்க்க விஜய் சங்கர் அருமையாக வீசி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

 

விக்கெட்டுகளைத் தூக்கி எறிந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள்:

 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் புதிய பந்தில் நன்றாக ஆடினர், கவாஜா, பிஞ்ச் ஜோடி 14.3 ஓவர்களில் 83 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், ஆட்டம் நன்றாக ஆஸி.க்கு போய்க் கொண்டிருந்தது ஏரோன் பிஞ்ச் தன் மீதான விமர்சனங்களை முறியடிக்கும் விதமாக 53 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 37 ரன்கள் என்று ஆடி வந்த போது உள்ளே வந்த குல்தீப் யாதவ் பந்தை தேவையில்லாமல் ஸ்வீப் ஆடி பந்தை மிஸ் செய்து எல்.பி.ஆகி வெளியேறினார்.

 

இன்னொரு முனையில் உஸ்மான் கவாஜா 37 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது ஜாதவ் பந்து ஒன்று வசதியாக ஆஃப் ஸ்டம்புக்கு வந்தது, பளார் என்று அறைய வேண்டிய பந்தை மந்தமாக முன்னால் வந்து மட்டையை முன் கூட்டியே திருப்ப விளிம்பில் பட்டு கவரில் கோலியிடம் கேட்ச் ஆனது, தேவையற்ற அவுட்.

 

அடுத்த 8 ஓவர்களில் 39 ரன்களை ஷான் மார்ஷ் (16), ஹேண்ட்ஸ் கம்ப் சேர்த்தனர். ஜடேஜாவின் அதிகம் ஸ்பின் ஆன பந்தை ஆடாமல் விடுவதற்குப் பதிலாக ஆடப்போய் லெக் திசையில் தோனியிடம் கேட்ச் ஆனார். ஏற்கெனவே பிட்ச் ஏற்றமும் தாழ்வுமாக இருக்க, குல்தீப் யாதவ் பந்து மட்டைக்கு அடியிலெல்லாம் சென்றது. அப்படிப்பட்ட தாழ்வான ஒரு பந்தில்தான் மேக்ஸ்வெல் 4 ரன்களில் பவுல்டு ஆனார், ஆனால் அவர் 18 பந்துகள் இதற்காக எடுத்துக் கொண்டார்.

 

28.3 ஓவர்களில் 132/4 என்று ஆஸ்திரேலியா கொஞ்சம் தடுமாறியது.. ஹேண்ட்ஸ்கம்ப்,ஸ்டாய்னிஸ் இணைந்து 39 ரன்களைச் சேர்த்தனர். இதற்கு 9 ஓவர்கள் எடுத்துக் கொண்டனர், ஆனாலும் ஆஸ்திரேலியா விரட்டலில் கட்டுப்பாட்டுடந்தான் இருந்தது. அப்போது 48 ரன்கள் எடுத்திருந்த ஹேண்ட்ஸ்கம்ப்  பேக்வர்ட் பாயிண்டில் தட்டி விட்டு ஒரு சிங்கிள் எடுக்க முயன்றார், பந்தை எடுத்த ஜடேஜா ரன்னர் முனையில் ஸ்டம்பை பெயர்த்தார். 171/5 என்று ஆனது. இதுவும் இல்லாத சிங்கிள் என்பதால் தூக்கி எறியப்பட்ட விக்கெட்டே.

 

ஸ்டாய்னிஸ் ஒரு முனையில் நிற்க விக்கெட் கீப்பர் கேரி 24 பந்துகளில் 22 ரன்களுக்கு நன்றாகவே ஆடிவந்தார். 48 பந்துகளில் 59 ரன்கள் என்ற நிலையில் 43வது ஓவரில் குல்தீப் யாதவ்வை நொறுக்கினர், கேரியும், ஸ்டாய்னிசும், கேரி 2 பவுண்டரிகளை விளாச ஸ்டாய்னிஸ் லாங் ஆனில் சிக்ஸ் வெளுக்க அந்த ஒவரில் 15 ரன்கள் வந்து 7 ஓவர்களில் 44 ரன்கள் வெற்றிக்குத் தேஐ என்ற நிலை ஏற்பட்டது. அடுத்த ஓவரில் ஷமி 6 ரன்களை விட்டுக் கொடுத்தார். 36 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற ஆஸி.வெற்றி உறுதியான நிலையில் மீண்டும் குல்தீப் யாதவ்வை 45வது ஓவரின் முதல் பந்தில் பௌண்டரி அடித்தார் ஸ்டாய்னிஸ். ஆனால் அதே ஒவரில் தேவையில்லாமல் கேரி உள்ளே வந்த ஸ்வீப் ஆட முடியாத, காலைப்போட்டு லாங் ஆனில் தள்ளிவிட்டு ஒருசிங்கிள் எடுக்க வேண்டிய பந்தை, ஸ்வீப் ஆட முயன்று பவுல்டு ஆக ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்தது. கூல்ட்டர் நைல் இறங்கி எல்லா பந்துகளை அடிக்கப் பார்த்தார், ஸ்டாய்னிஸுக்கு ஸ்டாண்ட் கொடுக்க வேண்டிய இவர் பும்ராவின் ஆகிருதி என்னவென்று தெரியாமல் அவரை ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்க நினைத்து பௌல்டு ஆனார், படுமோசமான பொறுப்பற்ற ஷாட். இவர் அவுட் ஆக கமின்சும் இதே ஓவரில் பும்ராவின் அருமையான பந்துக்கு தோனியின் அருமையான கேட்சுக்கு வெளியேற 8 விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 8 ரன்களில் தோல்வியும் தழுவியது ஆஸ்திரேலியா.

 

இந்தியா தரப்பில் 10 ஓவர்களில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.  விஜய் சங்கர் ஒரு ஓவரில் 13 ரன்கள் கொடுதவர் கடைசியில் 1.5 ஒவரில் 13/2 என்று வெற்றிநாயகனாக முடிந்தார், பேட்டிங்கிலும் முக்கியமான 46 ரன்களை அடித்தார் விஜய். ஷமி 10-0-60-0,  பும்ரா மிகப்பிரமாதமாக வீசி 10-0-29-2. என்று முடித்தார். ஜடேஜா 48 ரன்களுக்கு 1 விக்கெட், ஒரு ரன் அவுட். ஜாதவ் 8 ஒவர்கள் வீசி 33 ரன்கல் 1 விக்கெட்.

 

ஆட்ட நாயகன் 40வது ஒருநாள் சதம் அடித்த விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x