Published : 28 Mar 2019 07:50 AM
Last Updated : 28 Mar 2019 07:50 AM

ஆட்டத்தை மாற்றிய ஷமி ஓவரின் அந்த நோ-பால்: ஆந்த்ரே ரஸல் மீண்டும் காட்டடி - கொல்கத்தா இரண்டுக்கு இரண்டு

அன்று அஷ்வின் நெறியற்ற விதத்தில் மன்கடிங் முறையில்  ஜோஸ் பட்லரை அவுட் செய்து ராஜஸ்தான் ராயல்ஸை வென்றார், நேற்று அதற்கு கவித்துவ நீதியாக நோ-பால் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி வாய்ப்பைப் புரட்டி போட்டது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஒவர்களில் 218/4 என்று மிகப்பெரிய இலக்கை எடுத்தது, தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் 190/4 என்று முடிந்து 28 ரன்களில் படுதோல்வி அடைந்தது.

முதல் போட்டியில் ரஸல் எடுத்த 19 பந்து 49 ரன்கள் கொல்கத்தாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தது என்றால் நேற்று 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசியதில் கடைசியில் 15 பந்துகளில் 50 ரன்கள் எடுக்கப்பட்டது கிங்ஸ் லெவன் வெற்றி வாய்ப்பை மாற்றிப் போட்டது.

மொகமது ஷமி காரணமாகாத நோ-பால், அதனால் விளைந்த மாற்றம்:

ஆந்த்ரே ரஸல் 5 பந்துகளில் 3 ரன்களில் இருந்த போது மொகமது ஷமி பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். கொல்கத்தா அப்போது 17 ஓவர்கள் முடிவில் 163/3 என்றுதான் இருந்தது. அப்போதுதான் ஷமியின் அபார யார்க்கரில் ரஸலின் லெக் ஸ்டம்ப் பெயர்ந்தது. ரஸலும் வெளியேறினார், ஆனால் ரஸல் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டார்.  நோ-பால் கொடுக்கப்பட்டது, ஆனால் இது மொகமது ஷமியின் முன் கால் கிரீஸைத் தாண்டியதால் அல்ல, இடுப்புக்கு மேல் வீசப்பட்ட நோ-பாலும் அல்ல, ஆனால் ஒரு கேப்டன்சி பிழைதான், தவறுதான். ஷமி பந்து போடும் போது 30 யார்டு வட்டத்துக்குள் 3 பீல்டர்களையே கிங்ஸ் லெவன் நிறுத்தியிருந்தது. இதனால் நோ-பால் ஆக ரஸல் நாட் அவுட். 

இதனையடுத்து அடுத்த ஓவர்ல் ரஸல் புகுந்தார். 6,4,4, 6 என்று விளாச ஷமி மீண்டும் 19வது ஓவருக்குத் திரும்ப தொடர்ச்சியாக 3 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசித்தள்ளினார் ரஸல், ரவுண்ட் த விக்கெட்டில் வீசினார் ஷமி, இது மிக மோசமான ஒரு உத்தி, அதில் 2 புல்டாஸ்களையும் வீச ரஸல் அதனை கொல்கத்தாவுக்கு வெளியே அனுப்பினார்.  அந்த நோ-பாலுக்குப் பிறகே ரஸல் 12 பந்துகளில் 45 ரன்களை விளாசித்தள்ளினார். இந்த அதிரடிதான் போட்டியையே மாற்றி விட்டது. இரண்டரை ஓவர்களி 50 ரன்களை கிங்ஸ் லெவன் விளாச 218 ரன்கள் குவிக்கப்பட்டது, கொல்கத்தா பேட்டிங் ஆட்டக்களமாக இருந்தாலும் 218 ரன்கள் சேஸ் செய்வது கடினமே.

ராபின் உத்தப்பா அபாரம்:

கொல்கத்தாவின் தொடக்க வீரர்கள் கிறிஸ் லின், சுனில் நரைன் தொடங்கினர்.  இதில் லின் 10 பந்துகளில் 10 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஆனால் சுனில் நரைன் வெளுத்துக் கட்டினார் அவர் 9 பந்துகளில்  3 சிக்சர்களுடன் 24 ரன்கள் விளாசி விலோயன் பந்தில் வெளியேர 3.3 ஓவர்களில் 36 ரன்கள் என்று கொல்கத்தாவுகு எழுச்சித் தொடக்கம் கிடைத்தது.  வருண் சக்ரவர்த்தியின் முதல் ஓவரிலேயே 25 ரன்கள், அவரது அறிமுகம் இவ்வாறு பாழானது. நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா இணைந்து 110 ரன்கள் கூட்டணி அமைத்தனர், ராணா மிகப்பிரமாதமாக ஆடினார்.  இந்த 110 ரன்களுக்கு 66 பந்துகளே எடுத்துக் கொண்டனர், அதாவது 11 ஓவர்களில் 110, 10ம் வாய்ப்பாடு படித்தனர். ராணா 7 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து 15வது ஓவரில் ஆட்டமிழக்கும் போது கொல்கத்தா 146/3 என்று தான் இருந்தது.

அதன் பிறகுதான் ரஸல் இறங்கினார், ஷமியின் அபார யார்க்கரில் பவுல்டு ஆனார். அது அஸ்வினின் களவியூக மகா தவறினால் நோ-பால் ஆக ரஸல் 12 பந்துகளில் 45 ரன்களை வெளுத்து வாங்கினார், அன்று மகா அசிங்கம் மூலம் வெற்றி, நேற்று அதற்கு கவித்துவ நீதியாக மகாதவறு ஆட்டத்தைப் பறிகொடுக்கச் செய்தது. குறிப்பாக இந்தியாவின் உலகக்கோப்பை நம்பிக்கையான ஷமியை 3 சிக்சர்கள் தொடர்ச்சியாக அடித்து ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் விளாசித்தள்ளினார். ஆட்டத்தின் போக்கே மாறிப்போனது. ராபின் உத்தப்பா ஒரு முனையை இறுக்கிப் பிடிக்கும் பணியைத் திறம்படச் செய்து 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா 218/4. ஷமி 4 ஓவரில் 44 ரன்கள் ஒரு விக்கெட்,  அஸ்வின் புரட்டி எடுக்கப்பட்டு 4 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மந்தீப் சிங்கின் ஒரு ஓவரும் 18 ரன்கள் விளாசப்பட்டது. வருண் 3 ஓவர்கள் 35 ரன்கள்.

மயங்க், டேவிட் மில்லர், மந்தீப் ஆகியோரின் விடா முயற்சி:

கிங்ஸ் லெவன் அணி இமாலய இலக்கை நோக்கி இறங்கி ராகுல் விக்கெட்டை 1 ரன்னுக்கு இழந்தது, மிட் ஆஃபில் தூக்கிக் கையில் கொடுத்து விட்டுச் சென்றார். கிறிஸ் கெய்லுக்கு அருமையாக திட்டமிட்டு வீசினர். பெர்குசன், ரஸல் இருவருமே கெய்லின் பலவீனம் அறிந்து வீசினர், அன்று கிறிஸ் கெய்ல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளை வெளுத்துக் கட்டினார், அதனால் நேற்று லெக் அண்ட் மிடில் ஃபுல் லெந்த் அதாவது மட்டையை இழுத்து அடிக்க முடியாதவாறு வீச 13 பந்துகளில் 20 ரன்களுக்கு ரஸலிடம் வீழ்ந்தார். இதே போன்ற அடிக்க முடியாத ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்று கேட்ச் ஆனார் கெய்ல். முதல் போட்டியில் அற்புதமாக ஆடிய சர்பராஸ் கான் 13 பந்துகளில் 13 ரன்களுக்கு வெளியேற 8வது ஓவரில் 60/3 என்று ஆனது கிங்ஸ் லெவன்.

அதன் பிறகு மயங்க் அகர்வால் கிரிக்கெட்டுக்கே உரிய ஷாட்களுடன் 34 பந்துகளில் 58 ரன்களையும், டேவிட் மில்லர் 40 பந்துகளில் 59  ரன்களையும், மந்தீப் சிங் 15 பந்துகள்ல் 33 ரன்களைச் சேர்த்தும் விடா முயற்சி மேற்கொண்டனர், ஆனால் கொல்கத்தாவை நெருங்க முடியாமல் 190/4 என்று முடிந்தது. கொல்கத்தா இரண்டுக்கு இரண்டு வெற்றி. ரஸல் 3 ஓவர்களில் 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x