Published : 18 Feb 2019 04:05 PM
Last Updated : 18 Feb 2019 04:05 PM
புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, மொஹாலி கிரிக்கெட் அரங்கில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய செயல் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் கிரிக்கெட் அமைப்பின் பொருளாளர் அஜெய் தியாகி கூறுகையில், "புல்வாமா தாக்குதலில் நமது சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக, மொஹாலி கிரிக்கெட் அரங்கில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் வீரர்களின் அனைத்து புகைப்படங்களும் அகற்றப்பட்டன. பாகிஸ்தானுக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம். ஏறக்குறைய 15 வீரர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.
முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான், ஜாவித் மியான்தத், ஷாகித் அப்ரிடி உள்ளிட்டோர் புகைப்படமும் நீக்கப்பட்டன " எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாக இயக்குநர் வாசிம் கான், விளையாட்டு என்பது அரசியல் முரண்பாடுகளை, பகைமைகளைக் கடந்து பதற்றங்களைத் தணிக்கும் குணம் கொண்டது. அரசியல், விளையாட்டு இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்றே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து வந்தது.
விளையாட்டு, குறிப்பாக கிரிக்கெட் இருநாட்டு மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், பிரதமர் இம்ரான் கான் உட்பட பல்வேறு லெஜண்ட்களின் புகைப்படங்களை மறைக்கவோ அகற்றவோ செய்திருப்பது வருத்தத்திற்குரியதாகும்.
என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT