Published : 24 Feb 2019 05:55 PM
Last Updated : 24 Feb 2019 05:55 PM
டெல்லியில் நடந்துவரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டியில் 16வயது நிரம்பிய இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்று உலகசாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
டெல்லியில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. இதில் 2 பிரிவுகளைத் தவிர 14 பிரிவுகளில் தங்கம் வென்றால், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறலாம்.
இந்நிலையில், 10எம். ஏர்பிஸ்டர் பிரிவில் இன்று போட்டிகள் நடந்தன. இதில் இந்திய வீரரும் 16வயதான சவுரவ் சவுத்ரி 245 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சவுரவ் உலகக்கோப்பையிலும் தங்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு சவுரவ் தகுதிபெற்றுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் 3-வது இந்தியர் எனும் பெருமையைப் பெற்றார்.
2-வது இடத்தை 239.3 புள்ளிகளுடன் செர்பிய வீரர் டேமி மைக்கும், வெண்கலப்பதக்கத்தை 215 புள்ளிகளுடன் சீனாவின் வீன் பாங்கும் வென்றனர்.
தொடக்கத்தில் இருந்து சிறப்பாகச் செயல்பட்ட சவுரவ் முதல் சீரிஸில் செர்பிய வீரர் மைக்கும், சவுத்ரியும் சமநிலை பெற்றனர். ஆனால், 2-வது சீரிஸில் சவுரவ் சிறப்பாகச் செயல்பட்டு 5.7 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தைப் பெற்றார். மற்ற வீரர்களான அபிஷேக், ரவிந்தர் சிங் 576 புள்ளிகள் பெற்றபோதிலும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை.
துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2-வது தங்கம் இதுவாகும். இதற்கு முன் 10எம் ஏர்ரைபிள் பிரிவில் அபூர்வி சந்தேலா தங்கம் வென்றிருந்தார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு கொரியாவில் நடந்த துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சந்தேலா, அஞ்சும் மோட்கில் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT