Published : 24 Sep 2014 05:10 PM
Last Updated : 24 Sep 2014 05:10 PM

சிக்சர் மழையில் பொலார்டிற்கு அடுத்த இடத்தில் ரெய்னா

டால்பின்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் 43 பந்துகளில் 90 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கண்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.



183 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா மொத்தம் 5023 ரன்களை 34.88 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 5000 கடந்த முதல் இந்திய வீரர் என்பதோடு உலக அளவில் 7வது வீரராகவும் திகழ்கிறார்.



டால்பின்ஸ் அணிக்கு எதிராக 8 சிக்சர்களை விளாசிய ரெய்னா, சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் மொத்தம் 31 சிக்சர்களை அடித்து 2ஆம் இடத்தில் உள்ளார். 21 இன்னிங்ஸ்களில் இவர் 31 சிக்சர்களை அடிக்க கெய்ரன் பொலார்ட் 27 இன்னிங்ஸ்களில் 49 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்கிறார்.



மேலும் 8 சிக்சர்களை ஒரே இன்னிங்ஸில் அடித்த விதத்தில் சென்னை அணியில் தோனி நிகழ்த்திய சிக்சர் சாதனையை சமன் செய்தார் ரெய்னா.



தோனி, செப்டம்பர் 26, 2013-ல், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 19 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த போது 8 சிக்சர்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



சாம்பியன்ஸ் லீகில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்தவர் டேவிட் வார்னர். இவர் 2011ஆம் ஆண்டு தொடரில் ஆர்.சி.பி அணிக்கு எதிராக 68 பந்துகளில் 123 ரன்கள் விளாசிய போது 11 சிச்கர்களை அடித்தார்.



21 சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் ரெய்னா 726 ரன்கள் குவித்து முதலிடம் வகிக்கிறார். பொலார்ட் 28 ஆட்டங்களில் எடுத்த 649 ரன்கள் என்ற சாதனையைக் கடந்தார் சுரேஷ் ரெய்னா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x