Published : 24 Feb 2019 05:01 PM
Last Updated : 24 Feb 2019 05:01 PM

 முதல் டி20: தோனியை நீக்கிய மஞ்சுரேக்கர்

 

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில், விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள், 5  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது. முதலாவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்கிடையே இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் இன்று விளையாடும் 11பேர் கொண்ட இந்திய அணியில் தோனிக்கு  இடம் இருக்காது என்று பெரும் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக்கான அணியில் தோனி இடம் பெற்றுவிடுவார், ஆனால், டி20 போட்டியில் சில வீரர்களை சோதனை செய்ய வேண்டும் என்பதற்காக தோனிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மஞ்சரேக்கர் கூறுகையில், " 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு இந்திய அணியில் தோனி நிச்சயம் இடம் பெறுவார். அதேசமயம், ரிஷப் பந்த்தை அணிக்குள் கொண்டுவருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்கான ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் இடம் கிடைக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ராகுல் விளையாடவில்லை என்பதால்,அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் இந்த போட்டியில் களமிறங்குவார்.

அதுமட்டுமல்லாமல், ரிஷப்பந்த், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், குர்னல் பாண்டியா ஆகியோரை சோதித்துப் பார்க்க இரு டி20 போட்டிகள் போதுமானதாக இருக்காது என்கிற போதிலும் சோதனைத் திட்டத்துக்காக தோனிக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

என்னுடைய கணிப்பின்படி, இன்று விளையாடும் இந்திய அணியில், ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் அல்லது குர்னல் பாண்டியா, மயங்க் மார்க்கண்டே, யஜுவேந்திர சாஹல், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள். இவ்வாறு மஞ்சரேக்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x