Published : 11 Feb 2019 09:45 AM
Last Updated : 11 Feb 2019 09:45 AM

காலில் விழுந்த ரசிகர்: தேசியக் கொடிக்கு மதிப்பளித்த தோனி; 0.099 வினாடிகளில் ஸ்டெம்பிங் :ரசிகர்கள் பாராட்டு

ஹேமில்டனில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழுந்தபோது, அவர் கையில் வைத்திருந்த தேசியக் கொடி கீழே விழாமல் பிடித்து தோனியின் செயல் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஹேமில்டனில் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்தது. கடந்த இரு போட்டிகளிலும் வழக்கத்துக்கு மாறாக இந்திய வீரர்களைக் காண இந்திய ரசிகர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். குறிப்பாக தோனி களமிறங்கும்போதெல்லாம் விசில் சத்தமும், கைதட்டலும் காதைப் பிளந்தது. நியூசிலாந்திலும் தோனிக்கு ரசிகர்கள் கூட்டம் குறைவில்லாமல் இருந்து வருகிறது.

இந்திய வீரர்களுக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காகப் போட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நியூசிலாந்து அணி பேட் செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு ரசிகர் போலீஸ் பாதுகாப்பை மீறி கையில் இந்திய தேசியக் கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தார்.

அவரை விரட்டிக் கொண்டு பாதுகாவலர்கள் பின்தொடர்ந்தனர். ஆனால், அந்த ரசிகர், கையில் தேசியக் கொடியுடன் வந்து, தோனியின் காலில் விழுந்தார். அப்போது, அந்த ரசிகரின் கையில் இருந்த தேசியக் கொடி தோனியின் காலடியில் வைத்துவிட்டு விழ அந்த ரசிகர் முயற்சித்தார்.

ஆனால், தோனி, அந்த ரசிகரை எழுப்புவதற்குப் பதிலாக, தனது காலடியில் வைக்கப்பட இருந்த தேசியக் கொடி தாங்கிப் பிடித்துக் கொண்டார். அதன்பின் அந்த ரசிகரை எழுப்பிவிட்டு, தோனி தனது கையில் தேசியக் கொடியை வைத்துக்கொண்டார்.

தோனிக்கு இருந்த தேச பக்தியையும், தேசியக் கொடி மீது இருக்கும் மரியாதையையும், பார்த்த தொலைக்காட்சி வர்ணனணையாளர்களும் புகழ்ந்தனர். இந்த காட்சிகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது. தோனியின் தேசபக்தியையும், தாய்நாட்டின் மீதான மரியாதையையும் ரசிகர்கள் புகழ்ந்து, பாராட்டி வருகின்றனர்

அதுமட்டுமல்லாமல் தோனி நேற்று செய்த மின்னல்வேக ஸ்டெம்பிங்கும் பாராட்டப்பட்டு வருகிறது. 8 ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை சீபெர்ட் எதிர்கொண்டார். சீபெர்ட் தனது காலை கிரீசுக்குள் வைத்திருக்கிறேனா என்று திரும்புவதற்குள் தோனி ஸ்டெம்பிங் பணியை முடித்துவிட்டார். மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்யவே, ரீப்ளே காட்சியில் தோனியின் துல்லிய ஸ்டெம்பிங் தெளிவாகத் தெரிந்தது. சீபெர்ட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஐசிசி வெளியிட்ட ட்விட்டரில், தோனி அந்த ஸ்டெம்பிங்கை செய்வதற்கு 0.099 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார் என்று தெரிவித்துள்ளது. சர்வதேச அரங்கில் தோனியின் 191-வது ஸ்டெம்பிங் இதுவாகும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x