Published : 02 Feb 2019 01:39 PM
Last Updated : 02 Feb 2019 01:39 PM

தலையைப் பதம் பார்த்த பந்து: ஆஸி. வீரர் வீசிய பவுன்ஸரில் சுருண்டார் இலங்கை பேட்ஸ்மேன்: மருத்துவமனையில் அனுமதி

கான்பெரேராவில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில் தலையில் அடிபட்டு இலங்கை பேட்ஸ்மேன் திமுத் கருணா ரத்னே சுருண்டு விழுந்தார்.

ஏற்கெனவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பில் ஹக்ஸ் தலையில் அடிபட்டு உயிரிழந்ததால், கருணா ரத்னே களத்தில் சுருண்டு விழுந்தவுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்ததைக் காண முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி கான்பெரேரா நகரில் நடந்து வருகிறது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் பர்ன்ஸ், கம்மின்ஸ், பாட்டர்ஸன் ஆகியோர் சதம் அடித்தனர்.

இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 2-வது நாளான இன்று தொடக்க ஆட்டக்காரர்கள் கருணா ரத்னே, திரிமானே ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

பாட் கம்மின்ஸ் வீசிய 32-வது ஓவரை கருணா ரத்னே எதிர்கொண்டார். அந்த ஓவரின் 4-வது பந்து பவுன்ஸராக வரவே அதில் இருந்து தப்பிக்க தனது தலையை பின்பக்கமாகத் திருப்பி குனிய முயற்சித்தார். ஆனால், வேகமாகப் பந்து, உயரம் குறைவாக எழும்பிய நிலையில், வந்து கருணா ரத்னேயின் தோள் பட்டையில் பட்டு, பின்னர் தலைக்கும், கழுத்துப் பகுதியிலும் தெறித்தது.

கருணா ரத்னே ஹெல்மெட் அணிந்து விளையாடிய போதிலும் 140 கி.மீ. வேகத்தில் வீசப்பட்ட பவுன்ஸரின் வேகம் அவரின் ஹெல்மட்டையும் பதம் பார்த்தது.

பந்து தலையிலும், கழுத்திலும் பட்டவுடன் நிலைகுலைந்த கருணா ரத்னே சரிந்து கீழே விழுந்து மயங்கினார். உடனடியாக பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், இலங்கை, ஆஸ்திரேலிய அணியின் உடற்தகுதி நிபுணர்கள், மருத்துவர்கள் உடனடியாக மைதானத்துக்கு வந்தனர்.

கருணா ரத்னேவின் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது. அவரின் நினைவுகள், பேச்சு, கை, கால் அசைவு போன்றவை பரிசோதிக்கப்பட்டது. ஆனால், கழுத்துப் பகுதியில் தொடர்ந்து வலி இருப்பதாகவும், தலையில் வலி இருப்பதாகவும் கருணா ரத்னே தெரிவித்தார்.

இதையடுத்து, சிறிய ரக வாகனத்தின் மூலம் ஸ்ட்ரெச்சர் மூலம் கருணா ரத்னே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கருணா ரத்னேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருணா ரத்னே சுயநினைவுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "கருணா ரத்னே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கழுத்துப் பகுதியில் வலி இருப்பதாக கருணா ரத்னே தெரிவித்துள்ளார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குறுகிய கால பயணத்தில் காயமடைந்து செல்லும் 5-வது இலங்கை வீரர் கருணா ரத்னே என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x