Published : 06 Sep 2014 12:13 PM
Last Updated : 06 Sep 2014 12:13 PM

5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு பணியில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

உள்துறை, மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறையின் முன்னாள் சிறப்பு செயலாளர் பி.அமுதா, தொழிலாளர் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார். இதுவரை அப்பதவியில் இருந்த வீர சண்முகமணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் இருந்து மாநில அரசு பணிக்கு திரும்பியுள்ள ஹர்சகாய் மீனா, சுற்றுலாத்துறை ஆணையாளராக பணிஅமர்த்தப்படுகிறார். அவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார்.

மாநில அரசு பணிக்கு திரும்பியுள்ள ஸ்மிதா நாகராஜ் முதன்மைச் செயலர் அந்தஸ்தில் மாநில தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையாளர் ஜி.லதா, தொழில் துறை துணைச்செயலாளராக பணிஅமர்த்தப்படுகிறார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி முன்னாள் ஆணையாளர் டாக்டர் சந்தோஷ் பாபு, தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த பதவியில் இருந்த ஷீலா ராணி சுங்கத் பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x