Published : 08 Jan 2019 05:27 PM
Last Updated : 08 Jan 2019 05:27 PM

இந்தியாவில்தான் ஐபிஎல் 2019 தொடர் நடைபெறும்: தொடக்க தேதி அறிவிப்பு

2019 ஐபிஎல் தொடர் தேர்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறுமா அல்லது தென் ஆப்பிரிக்கா, யு.ஏ.இ. என்று போய்விடுமா என்ற சந்தேகத்துக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடைபெறும் என்று அறிவித்துள்ள பிசிசிஐ ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23-ம் தேதியன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

 

முழு அட்டவணை, அதாவது மைதானங்கள், போட்டிகள், தேதி விவரங்கள் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தனது செய்தியாளர்கள் குறிப்பில் கூறியுள்ளது.

 

ஏற்கெனவே 2009, 2014-ல் தேர்தல் சமயத்தில் ஐபிஎல் நடைபெற்றதால் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு நடத்தப்பட்டது.

 

இந்த முறையும் தென் ஆப்பிரிக்கா, யு.ஏ.இ என்று பிசிசிஐ பரிசீலனை செய்தது, ஆனால் இது குறித்து அரசுதரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை நடத்திய பிறகு முழுதும் இந்தியாவில் நடத்துவதாக முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

மார்ச் 23ல் ஆரம்பிப்பதால் மே மாதம் வரை செல்லும், உடனேயே உலகக்கோப்பை இருப்பதால், ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் அயல்நாட்டு வீரர்கள் ஆடுவது கடினமாகிவிடும் சூழல் நிலவுகிறது, இது அணி உரிமையாளர்களுக்கும், அணிகள் நிர்வாகத்துக்கும் கடும் சவாலாகும்.

 

ஐபிஎல் இறுதிப் போட்டி தேதி அறிவிக்கப்படவில்லை, மேமாதம் மத்தியில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x