Published : 29 Jan 2019 04:54 PM
Last Updated : 29 Jan 2019 04:54 PM

இந்த இந்திய அணி வேற லெவல்... 2013க்குப் பிறகு தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததில்லை : ராஸ் டெய்லர் ஏமாற்றம்

2013-க்குப் பிறகு நியூஸிலாந்து அணி தங்கள் நாட்டில் தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடையவில்லை என்று கூறும் ராஸ் டெய்லர், இம்முறை இந்த இந்திய அணி உண்மையில் ‘வேற லெவல்’ அணியாக  உள்ளதே தோல்விக்குக் காரணம் என்று மனம் திறந்துள்ளார்.

 

பொதுவாக எதிரணியை பொத்தாம் பொதுவாகப் பாராட்டுவதும் தன் அணியின் குறைபாடுகளை அலசுவதும்தான் வழக்கம், ஆனால் எதிரணியினரின் திறமைகளை விதந்தோதி அந்த வகையில் தங்கள் அணி பின் தங்கியுள்ளது என்று எந்த ஒரு எதிரணி வீரரும் ஒப்புக் கொள்ளத் தயங்குவார்கள், ஆனால் ராஸ் டெய்லர் இந்த விஷயத்தில் நேர்மையாக மனம் திறந்துள்ளார்.

 

அவர் கூறியதாவது:

 

எதிரணியினர் இம்முறை வேற லெவலில் ஆடுகின்றனர், முன்னேற்றம் கண்டுள்ளனர். முக்கியத் தருணங்களில் இந்திய அணி வென்று எங்களுக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்துகின்றனர்.  அரைகுறையாக ஆதிக்க நிலையில் இருந்தாலும் அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இந்திய அணி செய்து விடுகிறது, அது பேட்டிங்காக இருந்தாலும் பவுலிங்காக இருந்தாலும்.

 

அதாவது இந்தியா பேட் செய்யும் போது எங்களால் விக்கெட்டுகளை சீராக வீழ்த்தி நெருக்கடி கொடுக்க முடியவில்லை, நாங்கள் பேட் செய்யும் போது விரைவில் அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகின்றனர்.

 

பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் எங்களால் ஊடுருவ முடியவில்லை. விக்கெட்டுகளை இழக்காமல் ஆட வேண்டும், ஆனால் அதுவும் முடியவில்லை. காரணம் நீண்ட நேரங்களுக்கு இந்திய பந்து வீச்சு எங்களை கடும் அழுத்தத்தில் வைத்திருக்கிறது. மேலும் முக்கியத் தருணங்களில் விக்கெட்டுகளைச் சாய்த்து விடுகின்றனர். இன்னும் 25 ஓவர்கள் மீதமிருக்கும் போது 3 அல்லது 4 விக்கெட்டுகளை இழந்தால்  ஆட்டத்தில் மிகவும் பின் தங்கி விடுகிறோம். கடந்த போட்டியில் கடுமையாகப் போராடினோம் ஆனாலும் போதவில்லை.

 

இவ்வாறு கூறினார் ராஸ் டெய்லர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x