Published : 23 Jan 2019 10:11 AM
Last Updated : 23 Jan 2019 10:11 AM

‘ஏய்.. கருப்பு பயலே’...: தென் ஆப்பிரிக்க வீரர் மீது நிறவெறி வசை; கடும் சிக்கலில் பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்

தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டர்பனில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி போராடி வெற்றி பெற்றது, இதில் அந்த அணியின் பெலுக்வயோ 69 ரன்கள் எடுத்தது முக்கியப் பங்களிப்பு செய்தது.

 

பெலுக்வயோ அந்த இன்னிங்சில் நிறைய முறை தப்பித்தார், ஒரு எல்.பி.தீர்ப்பை ரிவ்யூ செய்து திருப்பினார், கேட்ச் ஒன்றும் விடப்பட்டது இவருக்கு.

 

இந்நிலையில் பெலுக்வயோவை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் வார்த்தைகளால் தொந்தரவு செய்து வந்தனர்.

 

முத்தாய்ப்பாக, இன்னிங்சின் 37வது ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடி பந்து ஒன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஒரு ரன்னை எடுத்தார் பெலுக்வயோ. அப்போது சர்பராஸ் அகமெடின் நிறவெறி வசை ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகக் கேட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

அவர் உருது மொழியில் ஏதோ கூறுகிறார், அது என்னவென்றால்.. “ஹேய் கருப்புப் பயலே... உன் அம்மா எங்கு இன்று உட்கார்ந்திருக்கிறாள்? உனக்காக என்ன வேண்டிக்கொள்ள அவரிடம் கூறினாய்..” என்று ஒருவாறாக மொழிபெயர்த்துக் கூறலாம்.

 

அவர் என்ன கூறினார் என்று வர்ணனையில் இருந்த ரமீஸ் ராஜாவிடம் கேட்ட போது, “பெரிய வாக்கியமாக இருக்கிறது, மொழிபெயர்ப்பது கடினம்” என்று மழுப்பிவிட்டார்.

 

ஆனால் கருப்பு என்ற நிறத்தைச் சுட்டிக் காட்டி சர்பராஸ் அகமெட் பேசியது ஐசிசி நிறவெறி எதிர்ப்பு விதிமுறைகளின் கீழ் கடுமையாகப் பார்க்கப்படுகிறது.

 

இதனையடுத்து ஆட்ட அதிகாரிகள் சர்பராஸ் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வாய்ப்புள்ளது.

 

தென் ஆப்பிரிக்க அணி 204 ரன்கள் வெற்றி இலக்கை 80/5 என்ற நிலையிலிருந்து விரட்டி 207/5 என்று வெற்றி பெற்றது. வான் டர் டூசன் 80 ரன்களை எடுக்க பெலுக்வயோ 69 ரன்களை எடுத்து இருவரும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

 

இந்நிலையில் இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சர்பராஸ் அகமெட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x