தோனி ஃபார்ம் குறித்து அனைவருக்கும் திருப்தி; பாண்டியா அவசியம் தேவை: ஷிகர் தவண்

தோனி ஃபார்ம் குறித்து அனைவருக்கும் திருப்தி; பாண்டியா அவசியம் தேவை: ஷிகர் தவண்
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுவதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷிகர் தவண், அணியின் சமச்சீரான தன்மைக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவசியம் என்று கூறினார்.

அதே போல் தோனி மீண்டும் டச்சிற்கு வந்ததும் அனைவருக்கும் மகிழ்ச்சியேற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கலீல் அகமெட், மொகமது சிராஜ் ஆகியோர் வழங்கப்பட்ட வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கொள்ளவில்லை எனவே நாளை அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கலீல் அகமெட், சிராஜுக்கு ஆதரவாக ஷிகர் தவண் பேசினார்.

“ஹர்திக் பாண்டியா அணியில் ஏற்படுத்தும் சமச்சீர் தன்மை மிக முக்கியமானது. கேதார் ஜாதவ் ஆடினாலும் அவரது பேட்டிங்குடன் ஆஃப் ஸ்பின் பவுலிங்கும் நமக்கு முக்கியத்துவமாக அமைந்துள்ளது. அவர் நம் அணியின் கோல்டன் ஆர்ம் என்றே கூறுவேன். எப்போதும் விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். பெரிய பார்ட்னர்ஷிப்புகளை அவர் உடைக்கிறார். டெஸ்ட் மற்றும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டுகளில் ஆல்ரவுண்டர் ஒருவர் இருப்பது அவசியம்.

கலீல், சிராஜ் இப்போதுதான் வந்துள்ளனர், இளம் வீச்சாளர்கள் நல்ல அணியுடன் ஆடும்போதுதான் அவர்களும் கற்றுக் கொள்ள முடியும். அவர்கள் ரன்கள் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் உத்திகள் பற்றி மறு ஆய்வு செய்து மேம்பட வேண்டும். அவர்களுக்கு இங்கு வாய்ப்பளித்தது நல்ல விஷயம்தான்.

தொடரை வெல்ல வேண்டுமென்றுதான் அனைவரும் முனைப்புடன் இருக்கிறோம், டெஸ்ட், ஒருநாள் தொடர் இரண்டையும் வெல்ல வேண்டும். இது மிகப்பெரிய சாதனைதான். இந்தச் சாதனையை நாங்கள் கொண்டாடவே செய்வோம்.

கடந்த போட்டியில் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். தோனி தன் பார்மை மீட்டுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் அவர் போன்ற ஆளுமை மிக்க ஒரு வீரர் எதிர்முனையில் ஆடுபவர்களுக்கு ஏகப்பட்ட நம்பிக்கையை அளிக்கிறார்” என்றார் ஷிகர் தவண்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in