

ஆஸ்திரேலிய அணிக்குள் தடை செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் வருவது குறித்த பேச்சு தற்போதைய வீரர்களிடத்தில் ஓய்வறையில் இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் அணி துணைக் கேப்டனும் விக்கெட் கீப்பருமான அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.
12 மாத தடை முடிந்து மார்ச் 29 வாக்கில் அவர்கள் அணித்தேர்வுக்குத் தயாராகும் நிலையில், நிச்சயம் உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்கிறது ஆஸ்திரேலிய ஊடகம்.
அப்படி இருவரும் வந்து விட்டால், இப்போதைய அணியிலிருக்கும் இருவீரர்கள் வெளியே போக வேண்டியதுதான்.
இந்நிலையில் அலெக்ஸ் கேரி கூறியதாவது: உள்ளபடியே கூற வேண்டுமெனில் நாங்கள் இன்னும் அவர்கள் அணிக்குத் திரும்புவது பற்றி ஓய்வறையில் எதுவும் பேசுவது இல்லை.
இப்போதைக்கு அணியில் இருப்பவர்கள் தங்கள் இடத்தைத் தக்க வைக்கவே முனைப்புடன் உள்ளனர். இந்த வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், ஸ்மித், வார்னர் அணிக்குள் நுழைவதைக் கடினமாக்கி விடுவார்கள். இதுவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு வலுசேர்ப்பதுதான்.
இவ்வாறு கூறினார் அலெக்ஸ் கேரி.