Last Updated : 04 Jan, 2019 10:56 AM

 

Published : 04 Jan 2019 10:56 AM
Last Updated : 04 Jan 2019 10:56 AM

ரிஷப் பந்த் அபார சதம் அடித்து புதிய சாதனை: திணறும் ஆஸி. 500 ரன்களைக் கடந்து இந்திய அணி

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இன்று விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அபாரமாக ஆடி சதம் அடித்து புதிய சாதனைப் படைத்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் கடந்து சென்றுள்ளது, இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது என செய்வதறியாது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

'பேபிசிட்டர்' என்று கூறிய ஆஸி கேப்டன் பெய்னுக்கு, ரிஷப் பந்த் தனது சதத்தின் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

'முதல் விக்கெட் கீப்பர்' ரிஷப் பந்த்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடிக்கும் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

மேலும், இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் 284 ரன்களைக் கடந்துவிட்டார் ரிஷப் பந்த்.

2-வது சாதனை

இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியிலும், ரிஷப் பந்த் சதம் அடித்து இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றார். இப்போது ஆஸ்திரேலியாவிலும் அந்த பெருமையைப் பெற்றுள்ளார். தற்போது ஆட்டமிழக்காமல் சதத்தை கடந்து சென்றுவரும் நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்ச ரன்களையும ரிஷப் பந்த் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் கடந்த 1967-ம்ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் பரூக் எஞ்சினியர் 89 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அதை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்த அணிகளில் விக்கெட் ஒருவரின் அதிபட்சம் என்பது தென் ஆப்பிரிக்காவின் டீ வில்லியர்ஸ் சதம் மட்டுமே. அவர் 2012-ம் ஆண்டில் ஆஸ்திரேலயாவுக்கு எதிராக பெர்த்தில் 169 ரன்கள் சேர்த்ததுதான் இன்று வரை சாதனையாக இருக்கிறது. இப்போது அதற்கு அடுத்தார்போல் சிட்னியில் ரிஷப் பந்த்  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

156 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 545 ரன்கள் சேர்த்துள்ளரு. ரிஷப் பந்த் 122 ரன்களுடனும், ஜடேஜா 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக, முதல்நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்திருந்தது. புஜாரா 130 ரன்களிலும், விஹாரி 39 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

லயன் வீசிய 102 ஓவரின் கடைசிப் பந்தில் விஹாரி ஷார்ட்லெக் திசையில் பந்து லாபுசாங்கேயிடம் கேட்சாக மாறியது. விஹாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

130-வது ஓவரில் லயன் பந்துவீச்சுக்கு புஜாரா இரையாகினார். லயனிடமே கேட்ச் கொடுத்து புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். 6-வது விக்கெட்டுக்கு புஜாரா, பந்த் இருவரும் 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் தனது மிக அதிகபட்ச ஸ்கோரையும் புஜாரா பதிவு செய்துள்ளார். வெளிநாடுகளில் புஜாராவின் அதிகபட்ச ஸ்கோர் 153 ரன்கள்தான் அதை இப்போது கடந்த 193 ரன்களைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது வீரர் புஜாரா ஆவார். இதற்கு முன் ராகுல் டிராவிட் கடந்த 2003-04ம் ஆண்டிலும், 2014-15-ம் ஆண்டில் விராட் கோலியும் அந்தச் சாதனையை படைத்திருந்தனர்.

குறிப்பாக கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 1200 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளார் புஜாரா. இதற்கு முன் ராகுல் டிராவிட் 2003-04ம் ஆண்டில் 1203 பந்துகளைச் சந்தித்திருந்தார். அவருக்குப் பின் 2-வது வீரர் புஜாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x