Last Updated : 30 Jan, 2019 03:29 PM

 

Published : 30 Jan 2019 03:29 PM
Last Updated : 30 Jan 2019 03:29 PM

ஒப்புக்கொள்கிறோம்.. இந்தியாவுக்குதான் உலகக்கோப்பை வாய்ப்பு: டூப்பிளசிஸ் வெளிப்படை

2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் அணிகள் என்றால், இந்தியாவுக்கு முதலிடம், அடுத்தார்போல் இங்கிலாந்து ஆகிய அணிகளை மட்டுமே சொல்ல முடியும் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் உறுதிப்படத் தெரிவித்தார்.

உலகக் கோப்பை என்றாலே தென் ஆப்பிரிக்க அணிக்கு துரதிருஷ்டம் பீடித்துவிடுகிறது. உலகக் கோப்பை தவிர மற்றநாடுகளுடன் நடக்கும் போட்டித்தொடர்களில் சிறப்பாக விளையாடும் அந்த அணி உலகக்கோப்பையில் இதுவரை அரையிறுதியைத் தாண்டியதில்லை. இப்போதும் தென் ஆப்பிரிக்க அணியாக இருந்தாலும், டொனால்ட், கர்ஸ்டன், ஹட்ஸன், குளுஸ்னர், மெக்மிலன், ஷான் போலாக், ஹேன்சி குரோனியே உள்ளிட்டவர்கள் இருக்கும் போதுகூட அரையிறுதியைத் தாண்டவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது தென் ஆப்பிரிக்கா. 43 ஓவர்களில் 298 ரன்கள் அடிக்க வேண்டியபோது, ஸ்டெயின் வீசிய கடைசி பந்தில் நியூசி வீரர் எலியட் சிக்ஸர் அடித்து வெற்றி பெறவைத்தார். துரதிர்ஷ்டத்துடன் தென் ஆப்பிரிக்க வெளியேறியது

இந்நிலையில், வரும் உலகக்கோப்பைக்கான வாய்ப்பு யாருக்கு இருக்கிறது தங்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இருக்குமா என்று கேப்டன் டூபிளெஸிசிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

உலகக் கோப்பையில் வெல்ல வேண்டும் என்ற நெருக்கடி வந்தவுடன் எங்களுக்கு ஒருவிதமான அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை உலகக் கோப்பை வெல்லும் அளவுக்குத் தகுந்த பலமான நிலையில் இருக்கிறோம்

ஆனால், இந்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் தகுதி முதலில் இந்திய அணிக்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதன்பின் இங்கிலாந்து அணிக்கு இருக்கிறது. இரு அணிகளுக்கும் இந்த முறை வாய்ப்பு இருக்கிறது.

எங்கள் அணியில் இளம்வீரர்களும் அனுபவம் இல்லாதவர்களும் இருப்பதால், வாய்ப்பை நினைத்து உற்சாகமாக இருக்கிறார்கள். நாங்கள் கடந்த காலங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுஇருக்கிறோம், பலமான அணி என்று நாளேடுகளில் வருகிறது. ஆனால், காகிதத்தில் மட்டும் பலமானது என்று இருந்தால் போதாது. கிரிக்கெட் என்பது காகிதத்தில் விளையாடும் விளையாட்டு அல்ல.

எத்திரணிகள் இப்போதுள்ளநிலையில் எங்களுடன் மோதினால், உண்மையாகக் கூறுகிறேன், வலிமையான அணியாக நாங்கள் இல்லை. ஆனால், தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பைக்குச் செல்லும்போது, நாங்கள் பேசும் போதும், எங்களுடன் போட்டியிடும் அணியும் எங்களுக்கு எதிராகப் பேசத்தான் செய்வார்கள்.

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையின்போது, ஏராளமான முயற்சிகளையும், நேரத்தையும் கோப்பையைவெல்ல செலவிட்டது நினைவிருக்கிறது. ஆனால், கடைசியில் நாங்கள் சோர்வடைந்து திரும்பினோம்.

அணியில் உள்ள எல்லோரும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், கேப்டனாக என்னைப் பொருத்தவரை, முக்கியமான ஒன்றை உறுதி செய்ய விரும்புகிறேன், அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சூப்பர்மேன் போல் நினைத்து விளையாடி வெற்றி பெறவைக்க முயற்சிக்காதீர்கள்.

கடந்த காலங்களில் தவறு செய்ததை நாங்கள் உணர்ந்துவிட்டோம், அனுபவித்துவிட்டோம். எதிர்பார்ப்புகள் உங்கள் தோளின் மீது அதிக சுமையை கொடுத்துவிடும். எப்போதும் போல் இங்கிலாந்து செல்லுங்கள், உலகக்கோப்பையில் விளையாடுங்கள். நம்முடைய முடிந்த அளவு சிறப்பான அளவுக்குத் திறமையை வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு டூப்பிளசிஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x