Published : 26 Apr 2014 09:37 PM
Last Updated : 26 Apr 2014 09:37 PM

பந்துவீச்சிலும் கலக்கிய பஞ்சாப்: 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி

அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆடிய 4 போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.



132 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு, கடந்த போட்டிகளில் டக் அவுட் ஆகிய கவுதம் காம்பீருக்கு பதில் பாண்டே, காலிஸுடன் இன்னிங்ஸை துவக்கினார்.

3-வது ஓவரில் பாண்டேவை 8 ரன்களுக்கும், அதைத் தொடர்ந்து வந்த கவுதம் காம்பீரை 5-வது ஓவரில் 1 ரன்னுக்கும், சந்தீப் சர்மா வெளியேற்றினார். பாலாஜி தன் பங்கிற்கு காலிஸை வீழ்த்தினார். முக்கிய வீரர்கள் 6 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்ததை அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை நம்பியே கொல்கத்தாவின் வெற்றி இருந்தது. .

சென்ற போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற கிறிஸ் லின் உத்தப்பாவுடன் இணைந்து வெற்றிக்காக போராடினார். ஆனால் 13 ரன்களுக்கு லின் ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் ஏமாற்றம் அளித்து வந்த யூசுப் பதான், இந்த போட்டியிலும் 3 ரன்களுக்கு வீழ்ந்தார். அதே ஓவரில் உத்தப்பாவும் 19 ரன்களுக்கு ரன் அவுட் ஆக பஞ்சாபின் வெற்றிவாய்ப்பு உறுதியானது.

ஒரு முனையில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடிவந்தாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. யாதவ்வும் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பஞ்சாப் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ந்து தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்தது.

பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் மேக்ஸ்வெல் மற்றும் மில்லர் இன்று ஏமாற்றமளித்தாலும், சிறப்பான பந்துவீச்சு அந்த அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. 4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சந்தீப் சர்மா, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தாவின் கேப்டன் காம்பீர் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பஞ்சாபிற்கு துவக்க வீரர்களாக புஜாரா மற்றும் சேவாக் களமிறங்கினர். 2-வது ஓவரில் துரதிர்ஷடவசமாக புஜாரா ரன்-அவுட் ஆனார். தொடர்ந்து ஆட வந்த சாஹா, கொல்கத்தாவின் பந்துவீச்சை சிதறடிக்க முயற்சித்து 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டிகளில் பஞ்சாபின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல் களமிறங்க, ஆடுகளம் சூடுபிடித்தது. 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல், மார்கலின் பந்தில் ஆட்டமிழந்து பஞ்சாப் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

தொடர்ந்து வந்த மற்றொரு அதிரடி வீரர் டேவிட் மில்லரும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து சாவ்லாவின் பந்தில் வெளியேற, ஆட்டம் கொல்கத்தா அணியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தொடர்ந்த பெய்லி, சேவாக் ஜோடி, அணியின் நிலைமையை சீராக்க முயன்றது. ஆனால் சாவ்லா வீசிய 14-வது ஓவரில் பெய்லி 11 ரன்களுக்கும், சேவாக் 37 ரன்களுக்கும் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.

பின்னால் வந்த வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது. ரிஷி தவன் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கொல்கத்தா அணியில் சுனில் நரைன், பியூஷ் சாவ்லா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x