Published : 04 Dec 2018 06:05 PM
Last Updated : 04 Dec 2018 06:05 PM
2019 ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய மாற்றமாக டெல்லி டேர் டெவில்ஸ் அணி பெயரை அணி உரிமையாளர்கள் மாற்றியுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பெயர் அறிவிக்கப்பட்டது.
இது வரை இருந்த டெல்லி டேர் டெவில்ஸ் என்ற பெயருக்குப் பதிலாக இனி டெல்லி கேப்பிடல்ஸ் என்று அந்த அணி அழைக்கப்படும்.
டெல்லி ஐபிஎல் அணியின் உரிமையாளர்களான ஜி.எம்.ஆர்.குரூப் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டனர். கூடைப்பந்து தொடரான யுபிஏ-வில் ஏற்கெனவே டெல்லி கேப்பிடல்ஸ் என்ற அணி ஆடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி அணியில் 50% பங்குகளை வாங்கியது ஜே.எஸ்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ், இவர்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று துடியாய் நின்றதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இந்நிறுவன இயக்குநர் பார்த் ஜிண்டால் கூறும்போது, “டெல்லியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அர்த்தமாகும் வண்ணம் ஒரு பெயர் தேவைப்பட்டது அதனால் டெல்லி கேப்பிடல்ஸ் என்று மாற்ற முடிவு செய்தோம்” என்றார்.
இதோடு மட்டுமல்லாமல் அணியின் லோகோ, மற்றும் வீரர்களின் சீருடை வண்ணமும் மாறுகிறது. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார், இவருக்கு உதவியாளராக மொகமது கயீஃப் இருப்பார். உதவிப் பயிற்சியாளர்களில் பிரவீண் ஆம்ரேவும் இணைந்துள்ளார்.
ஐபிஎல் 2019 ஏலங்களை அடுத்து கவுதம் கம்பீரை டெல்லி டேர் டெவில்ஸ் விடுவித்தது. 2019 ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவண் ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ வீரராகக் களமிறங்குவார்.
டெல்லி அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் 11 தொடர்களில் ஆடியும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. 2018 தொடரில் அட்டவணையில் கடைசி அணியாக முடிந்தது.
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெயர் மாற்றத்துடன் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில்கோப்பையை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT